This Article is From Apr 08, 2020

“மோடி வாஸ் கிரேட்!”- மருந்து ஏற்றுமதிக்கு அச்சுறுத்திய நிலையில் டிரம்ப் யூ-டர்ன்!!

அமெரிக்காவில் 4 லட்சம் பேருக்கு மேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 

“மோடி வாஸ் கிரேட்!”- மருந்து ஏற்றுமதிக்கு அச்சுறுத்திய நிலையில் டிரம்ப் யூ-டர்ன்!!

இந்தியளவில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 4,699 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 149 பேர் உயிரிழந்துள்ளனர். 

ஹைலைட்ஸ்

  • அமெரிக்காவில் 4 லட்சம் பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு
  • அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 13,000-ஐத் தாண்டியுள்ளது
  • இந்தியாவில் 4,500-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு
New Delhi:

இந்தியா, கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக செயல்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் (hydroxychloroquine,) என்னும் மருந்தை ஏற்றுமதி செய்யவில்லை என்றால், விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டி கருத்து கூறியுள்ளார் டிரம்ப்.

மலேரியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படும் இந்த மருந்தினால் கொரோனா தொற்றை எதிர்கொள்ள முடியுமா என்று வல்லுநர்கள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். 

குஜராத்திலிருந்து அமெரிக்காவுக்கு, இந்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து, 29 மில்லியன் டோஸ்களில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள நிலையில், டிரம்ப், மோடியைப் பாராட்டிப் பேசியுள்ளார்.

டிரம்ப், “ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தின் பல லட்சம் டோஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. 29 மில்லியன் டோஸ்களுக்கு மேல். நான் பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசினேன். அவரிடம் இந்த மருந்தை அனுப்பச் சொல்லிக் கேட்டேன். அவர் கிரேட். அவர் ரியலி குட்,” என்று ஃபாக்ஸ் செய்திச் சேனலுக்கு அளித்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார் டிரம்ப். 

முன்னதாக வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் டிரம்ப், “ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை பிரதமர் நரேந்திர மோடியின் அரசு, ஏற்றுமதி செய்யாமல் இருக்குமென்றால் நான் ஆச்சரியப்படுவேன். அவர்தான் அது குறித்து என்னிடம் சொல்ல வேண்டும். நான் பிரதமர் மோடியிடம், ஞாயிற்றுக் கிழமை கூட பேசினேன். அப்போது எங்களின் மருந்துகள் வருவதை அனுமதிப்பதற்கு நன்றி தெரிவித்தேன். அதே நேரத்தில் தற்போது மருந்தை ஏற்றுமதி செய்ய முடியாது என்று அவர் சொன்னால் பரவாயில்லை. அதே நேரத்தில், அதற்கு விளைவுகளை சந்திக்க நேரிடும்,” என்று எச்சரிக்கை விடுக்கும் தொனியில் இவ்விவகாரம் குறித்துப் பேசினார்.
 

2dgcoqes

மலேரியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படும் இந்த மருந்தினால் கொரோனா தொற்றை எதிர்கொள்ள முடியுமா என்று வல்லுநர்கள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். 

உலகளவில் 70 சதவிகித ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து உற்பத்தி இந்தியாவில்தான் செய்யப்படுகிறது. இந்த மருந்து கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படலாம் என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அறிவித்துள்ளது. 

கடந்த வாரம் இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் ஐ.சி.எம்.ஆர், இந்த மருந்தை கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் சுகாதாரத் துறை ஊழியர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரை செய்தது. 

ஆனால், இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவத் தொடங்கிய நிலையில், மார்ச் 25 ஆம் தேதி ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் ஏற்றுமதிக்குத் தடை விதித்தது இந்திய அரசு. ஆனால் இது குறித்து நேற்று மத்திய அரசு தரப்பு, “எந்த நாடுகளுக்கு இந்த மருந்து அதிகம் தேவைப்படுகிறதோ, மனிதாபிமான அடிப்படையில் தேவையான அளவு அனுப்பப்படும்,” என்று முடிவெடுத்துக் கூறியது. 

இந்த முடிவினால் தற்போது அமெரிக்காவுக்கு, மருந்து ஏற்றுமதி நடந்துள்ளது. அதே நேரத்தில் அரசின் இந்த முடிவை எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. குறிப்பாக காங்கிரஸின் ராகுல் காந்தி, “நட்பு என்பது பதிலடி கொடுப்பது கிடையாது. மிகவும் உதவி தேவைப்படும் எந்த தேசத்துக்கும் இந்தியா உதவி செய்ய வேண்டும். ஆனால், உயிரைக் காக்கும் மருந்துகள் முதலில் இந்தியர்களுக்கு அதிக அளவில் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்,” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியளவில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 4,699 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 149 பேர் உயிரிழந்துள்ளனர். 

அமெரிக்காவில் 4 லட்சம் பேருக்கு மேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 

உலகளவில் 14 லட்சம் பேர் கொரோனா தொற்றால் அவதிப்பட்டு வருகின்றனர். இதுவரை 82,000 பேரை இந்த நோய் கொன்றுள்ளது. 

With input from PTI

.