Coronavirus in Tamilnadu: நேற்று நள்ளிரவு 12 மணி முதல் 21 நாட்கள் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது
ஹைலைட்ஸ்
- தமிழகத்தில் இதுவரை 26 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
- தமிழகத்தில் ஒருவர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளார்
- நேற்று முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது
Coronavirus in Tamilnadu: தேசிய அளவில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு உத்தரவுகளும், பூட்டுதல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் 23 ஆக இருந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தற்போது 26 ஆக அதிகரித்துள்ளதாக, மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததன்படி, நேற்று நள்ளிரவு 12 மணி முதல் 21 நாட்கள் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இதனால் நாடெங்கிலும் மக்கள் சகஜமாக வெளியே வருவதற்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இப்படி கொரோனாவுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நபர், வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இருந்த ஒருவர், வைரஸ் தொற்றிலிருந்து மீண்ட நிலையில், தற்போது இரண்டாவது நபரும் மீண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், “டெல்லியிலிருந்து சென்னை வந்த நபருக்கு கொரோனா இருப்பதை முன்பு கண்டறிந்தோம். தமிழகத்தின் 2வது கொரோனா நோயாளி இவர். ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து இரண்டு கட்டாய சோதனைகளுக்குப் பிறகு அவருக்குக் கொரோனா பாதிப்பு இல்லை என்று தற்போது தெரியவந்துள்ளது. இன்னும் 2 நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்,” என்ற தகவலைப் பகிர்ந்துள்ளார்.