தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடியவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தினை கடந்திருக்கக்கூடிய நிலையில், அரசு தற்போது பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய பொருளாதாரத்தினை மீட்டெடுப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது. முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி முழு முடக்க (lockdown) நடவடிக்கை அமலில் இருக்கக்கூடிய காலகட்டங்களில் சில துறைகள் இயங்குவதற்குத் தளர்வுகள் அனுமதிக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். தற்போது அதில் மேலும் சில துறைகள் இணைக்கப்பட்டிருக்கின்றது.
வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் மைக்ரோ நிதி நிறுவனங்கள் தேங்காய், மூங்கில், போன்ற விவசாய அறுவடை பணிகள், தேயிலை தோட்ட பணிகள், பழங்குடியினரால் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் போன்றவை அத்தியாவசியமாக கருதப்பட்டு மேற்குறிப்பிட்டவற்றுக்கு ஊரடங்கிலிருந்து தளர்வு அளிக்கப்படும்.
மேலும், கிராமப்புறங்களில் நீர் வழங்கல், சுகாதாரம் பணிகள், மின் இணைப்புகள், தொலைத்தொடர்பு ஆப்டிகல் ஃபைபர்கள் மற்றும் கேபிள்களை அமைத்தல் போன்ற நடவடிக்கைக்கு அனுமதி வழங்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்குத் தேவையான எழுது பொருட்கள், மற்றும் மடிக்கணினி போன்ற மின்னணு சாதனங்களை இணைய தளத்தில் விற்பதற்கு அரசு நேற்று இரவு முதல் அனுமதி வழங்கியுள்ளது. இந்த அனுமதியில் குளிசாதனபெட்டி, மொபைல் போன்கள், தொலைக்காட்சிகள் போன்றவற்றை விற்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர்கள் ஆர்டர் செய்த பொருட்களை விநியோகிக்க வாகனங்கள் பயன்படுத்தப்படும் போது அவை உரிய அனுமதி பெற வேண்டும்.
ஏப்ரல் 20 வரை கடுமையான கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டு பின்னர், கொரோன தொற்று பரவல் மையங்களாக(hotspots)அடையாளம் காணப்படாத மாவட்டங்களில் கட்டுமான மற்றும் உற்பத்தி நடவடிக்கைகள் மீண்டும் தொடங்க அனுமதிக்கப்படும் என அரசு குறிப்பிட்டிருக்கிறது.
இவ்வாறாக அனுமதி அளிக்கப்பட்டு இயங்கப்படும் தொழிற்சாலைகள் மற்றும் பணியிடங்களில் தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கைகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்றும் அரசு குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 1.5-2.8 என்ற விகிதத்தில்தான் இருக்கும் என உலக வங்கி குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2021-22ம் ஆண்டில் 7.4 சதவிகிதமாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.