இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மே முதல் வாரத்தில் உச்சத்தில் இருக்கும் என்றும், அதன் பின்னர் அதன் எண்ணிக்கையானது குறையும் என உள்நாட்டு அரசு மதிப்பீடுகள் பரிந்துரைத்துள்ளதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் மற்ற மாநிலங்களுக்கு முன்பாகவே ஊரடங்கு உத்தரவை அமல்படுத்திய மாநிலங்களில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதைக் காணலாம் என தகவல்கள் தெரிவித்துள்ளன.
அந்தவகையில், குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்திய மகாராஷ்டிரா, குஜராத், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் முதலில் முழு ஊரடங்கை அமல்படுத்திய ராஜஸ்தான், பஞ்சாப், பீகார் போன்ற மாநிலங்கள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதை தவிர்த்துள்ளன.
இதுதொடர்பாக மூத்த அதிகாரி ஒருவர் என்டிடிவியிடம் கூறும்போது, அடுத்த ஒரு வாரம் என்பது மிகவும் முக்கியமானதாகும், இந்தியா தனது சோதனையை அதிகரிக்க உள்ளது. கடுமையான சுவாச நோய்த்தொற்று தொடர்பான அறிகுறிகள் உள்ள அனைவருக்கும் சோதனை மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த சில நாட்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து, உயரும் என அரசு எதிர்பார்க்கிறது. தினமும் நாங்கள் சோதனையை அதிகரிக்க அதிகரிக்க எண்ணிக்கை உயரும் என்றும், அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்படும் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி மே.3ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டதிலிருந்து தற்போது வரை இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,800 ஆக உயர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12,000 தாண்டியது. இதுவரை 3.6 லட்சம் பேர் வரை அரசு இடத்திலோ அல்லது வீட்டிலோ தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
முதலில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட ராஜஸ்தானில், 1076 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 221 பேர் குணமடைந்துள்ளனர். தொடர்ந்து, அங்கு 7,448 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாபில் 188 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 29 பேர் குணமடைந்துள்ளனர். தொடர்ந்து, அங்கு 12,000 பேர் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பீகாரில் 72 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 27 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், 13 பேர் வரை உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து, 11,000 பேர் அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஊரடங்கு உத்தரவைத் தாமதமாக அறிவித்த மகாராஷ்டிராவில், அதிகபட்சமாக 3,000 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். 75,000 பேர் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், அங்கு 187 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், நாட்டிலே அதிகமான உயிரிழப்பு ஏற்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது.
குஜராத்தில் 766 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 118 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 33 பேர் உயிரிழந்துள்ளனர். 15,147 பேர் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.