கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இன்றுடன் ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வரும் நிலையில், காணொளி காட்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி. அப்போது அவர், ஊரடங்கு உத்தரவு, மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பில் உள்ள சிக்கல்கள் பற்றியும் போதாமைகள் பற்றியும் காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. குறிப்பாக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், கட்சியின் மூத்த நிர்வாகி அபிஷேக் சிங்வி உள்ளிட்டோர் பிரதமரின் அறிவிப்பில் பெரும் குறைகள் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
முன்னதாக பிரதமர் மோடி, “இந்தியா முழுவதற்கும் ஊரடங்கு உத்தரவு மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. இனியும் கொரோனா ‘ஹாட்ஸ்பாட்டுகள்' ஏற்படாதவாறு நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். கொரோனா அதிகமுள்ள ஹாட்ஸ்பாட்டுகளில் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நாடு முழுமைக்கும் கடுமையான கட்டுப்பாடுகளுடைய முடக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
ஏப்ரல் 20 ஆம் தேதிக்குப் பிறகு, எந்த இடங்களில் கொரோனா வைரஸ் தொற்று குறைவாக உள்ளதோ, அந்த இடங்களில் அடிப்படை பணிகள் நடைபெற அனுமதிக்கப்படலாம். ஏழை, எளிய மக்கள் மற்றும் விவசாயிகளுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்துவதுதான் எனது முதல் நோக்கமாக இருக்கும்.
அனைத்துப் பகுதிகளிலும் எப்படிப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கலாம் என்பது குறித்து ஆராயப்படும். சமூக விலக்கலையும் ஊரடங்கு உத்தரவையும் கடைப்பிடித்ததால் நம் நாடு பயனடைந்தது. ஆனால், அதற்கு நாம் ஒரு விலை கொடுத்தோம். உயிரைக் காப்பதைவிட எதுவும் முக்கியமல்ல.
இந்தியா, கொரோனாவால் பிரச்சினை அதிகரிக்கும் வரையில் காத்திருக்கவில்லை. இந்த தொற்று நோயைக் கையாள முடியாமல் பல வளர்ந்த நாடுகளே திண்டாடி வருகின்றன.
இந்த நாட்டைக் காக்க நீங்கள்தான் உதவி புரிந்தீர்கள். ஆனால், அதற்காக நீங்கள் சந்தித்து வரும் இன்னல்களையும் நான் அறிவேன். சிலர் உணவுக்கும், அடிப்படைப் பொருட்களுக்கும் கஷ்டப்பட்டு வருகிறீர்கள். உங்கள் முன் நான் தலை வணங்குகிறேன்.
இந்த வைரஸ் தொற்றை எதிர்த்து நாம் போராடுவது, பாபா சாகேப் அம்பேத்கருக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும். இந்த நாடு ஊரடங்கின் போது, ‘நாம் இந்தியர்கள்' என்பதை நிரூபித்தது. உங்கள் குடும்பத்தின் நல்ல ஆரோக்கியத்திற்கு நான் பிரார்த்திக்கிறேன்,” என்று தன் உரையில் குறிப்பிட்டார்.
இதற்கு ப.சிதம்பரம், “ஏழை, எளிய மக்கள், 21 + 19 நாட்கள், உணவு உட்பட அனைத்துத் தேவைகளையும் அவர்களே பார்த்துக் கொள்ள பணிக்கப்பட்டுள்ளார்கள். அரசிடம் பணம் உள்ளது. அரசிடம் உணவு உள்ளது. ஆனால், இரண்டையும் விநியோகிக்க அரசு முன்வரவில்லை. என் தேசமே அழு.
பிரதமர் நரேந்திர மோடி, ஊரடங்கு நீட்டித்துள்ளதின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்கிறோம். நாங்கள் அதை ஆதரிக்கிறோம்,” என்று கருத்துக் கூறியுள்ளார்.
அபிஷேக் சிங்வி, “பிரதமர் மோடியின் உரையில் எந்த வித தெளிவான தகவல்களும் இல்லை. ஒரு வார்த்தை கூட இல்லை,” என்று விமர்சித்துள்ளார்.
World
India
State & District Details
State | Cases | Active | Recovered | Deaths |
---|