மத்திய உணவுத்துறையில் அலுவலகத்திற்கு நேரில் வராத அரசு அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் எச்சரிக்கை செய்துள்ளார்.
மக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும், கொரோனா மீட்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும் நேற்றிலிருந்து மத்திய அமைச்சர்கள் அவரவர் அலுவலகங்களுக்கு வரத் தொடங்கியுள்ளனர். இதேபோன்று டெல்லி மத்திய அரசு அலுவலகங்களில் அதிகாரிகளும் வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொரோனா பரவல் அச்சம் காரணமாக, உணவுத்துறையில் பல அதிகாரிகள் பணிக்கு வரவில்லை.
ஒருபக்கம் மருத்துவர்கள் கொரோனா நோயாளிகளுடன் 24 மணிநேரமாகப் போராடி, அவர்களை காப்பாற்ற முயல்கின்றனர். இந்த பணியில் காவலர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் கிட்டத்தட்ட 24 மணிநேரமும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அலுவலகத்திற்கு வராத அதிகாரிகள் மீது உணவு மற்றும் நுகர்வோர் நல அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானுக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், 'உணவுத்துறையில் யாரெல்லாம் பணிக்கு வர விருப்பம் இல்லையோ அவர்கள் மீது தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு பணி நீக்கம் செய்யப்படுவார்கள்' என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 24-ம்தேதி 21 நாட்கள் ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தார். அது இன்றுடன் முடிவடைகிறது. இதையொட்டி, டெல்லியில் மத்திய அரசு அலுவலகங்கள் செயல்படத் தொடங்கும் என முன்னர் அறிவிக்கப்பட்டு, நேற்றிலிருந்து பணிகள் தொடங்கியுள்ளன.
இந்த நிலையில் இன்று காலை நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு மே 3-ம்தேதி வரை நீட்டிக்கப்படும் என அறிவித்துள்ளார். நிலைமையை பொறுத்து ஏப்ரல் 20-ம்தேதிக்கு பின்னர் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து அடுத்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.
முன்னதாக கடந்த சனியன்று, அனைத்து மாநில முதல்வர்களுடன் கொரோனா நிலவரம் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக நேற்றிலிருந்து மத்திய அமைச்சர்கள் தங்களது பணியை தொடங்கியுள்ளனர். அவர்களது அலுவலகங்களில் சமூக விலகல், அதிகாரிகள் மாஸ்க் அணிவது, சானிட்டைசர் உபயோகம் போன்ற தடுப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுகின்றன. பொருளாதார இழப்பை சரி செய்யும் நோக்கில் மத்திய அமைச்சர்கள் தங்களது பணிகளை தொடங்கியுள்ளனர்.