தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடியவர்களின் எண்ணிக்கையானது 14,000 ஐ கடந்திருக்கக்கூடிய நிலையில், மருத்துவர்களோடு சேர்த்து சுகாதார பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களின், சேவைகள் மக்களுக்கு அத்தியாவசியமாக இருக்கின்றன. இந்த நிலையில் சமீபத்தில் மத்தியப் பிரதேச மாநிலத்தின் தேவாஸ் மாவட்டத்தில் துப்புரவு பணியாளர்களைக் கோடாரி கொண்டு ஊர்மக்கள் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலமானது, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் தேசிய அளவில் நான்காவதாக உள்ளது. இங்கு ஏறத்தாழ 1,300க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 69 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அம்மாநில அரசு தொற்று தடுப்புக்காக சுகாதார பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையில் தேவாஸ் மாவட்டத்தில் துப்புரவு பணியில் ஈடுபட்ட பணியாளர்களை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் கோடாரி கொண்டு தாக்கப்பட்டதில் துப்புரவுப் பணியாளரின் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரை மீட்ட காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
சில வாரங்களுக்கு முன்பு இதே போல சுகாதார பணியாளர்கள், குடிமை அதிகாரிகளுக்கும் ஊர் மக்களுக்கும் இடையே நடத்த மோதலுக்குப் பிறகு இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்று உள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்டதாகக் கருதப்படும் பிரதான குற்றவாளி ஆதில் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மற்றொரு குற்றவாளியான இவரின் சகோதரர் தலைமறைவானதையொட்டி காவல்துறையினர் அவரை தேடி வருகின்றனர்.
தேவாஸ் மாவட்டத்தில் துப்புரவு பணியில் ஈட்டுப்பட்டிருந்த தீபக் மற்றும் அவரது குழுவினர் மீது ஆதில் என்பவர் கடுமையான தாக்குதலை தொடுத்திருக்கிறார். இதில் தீபக் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மீது தாக்குதல் நடத்திய ஆதில் மற்றும் அவரது சகோதரர் மீது எஸ்.டி எஸ்.சி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என காவல்துறை அதிகாரி சஜ்ஜன் சிங் கூறியுள்ளார்.
இதேபோல இம்மாத தொடக்கத்தில் இந்தூர் பகுதியில் உள்ளூர் கும்பல்களால் சுகாதார பணியாளர்கள் மற்றும் குடிமை அதிகாரிகள் தாக்கப்பட்டனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஸ்கீரின் செய்ய சென்றிருந்த போது இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. மேலும், இந்த தாக்குதலில் இரண்டு மருத்துவர்களும் தாக்கப்பட்டனர். முன்னதாக இம்மாநிலத்தில் போபாலில் பணியிலிருந்த காவலர் மீது ஒரு குழு கற்களைக் கொண்டு தாக்கியது. இதில் காவலர் காயமடைந்தார். இது தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர், அவர்களில் இருவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் (என்எஸ்ஏ) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், மற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் கைகளை தட்டி நன்றியை வெளிப்படுத்தக் கேட்டுக்கொண்டிருந்தார். இந்த நிலையில் ஒரு புறம் அவர்களுக்கு கைதட்டி நன்றி தெரிவிக்கப்பட்டும் மறு புறம் அவர்கள் தாக்கப்படுவதும் நிகழ்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
World
India
State & District Details
State | Cases | Active | Recovered | Deaths |
---|