தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 200க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாகக் கண்டறியப்பட்டுள்ளனர். என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும், “சென்னையில் அதிகபட்சமாக 176 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 2,526 ஆக அதிகரித்துள்ளது.“
“இன்று 98 வயது முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுவரை தமிழகத்தில் 28 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை 1,29,000க்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இன்று தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்டவர்களில் 86 பேர் பெண்கள், 117 பேர் ஆண்கள். தமிழகம் முழுவதும் 9615 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அதேபோல சோதனை மையங்களின் எண்ணிக்கை 41லிருந்து 45ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 703 கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிக்கக்கூடிய கர்ப்பிணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.“ என விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தற்போது மே 3 வரை நடைமுறையில் உள்ள முழு முடக்கம் என்பது (LOCK DOWN) மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது.