இந்தியா முழுவதும் கொரோனா தொற்று தற்போது வெகுவாக அதிகரித்து வருகின்றது. சமீபத்தில் மார்ச் 8-10 தேதிகளில் டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் என்கிற இஸ்லாமியக் கொள்கை பரப்பு கூட்டத்தில் பங்கேற்ற மக்கள் தற்போது கொரோனா வைராஸ் நூற்றுக்கணக்கில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். தெலுங்கானாவில் இறந்த ஆறு பேர் மற்றும் காஷ்மீரில் இறந்த ஒருவர், இந்த கொள்கை பரப்புக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் பரவும் அளவிற்கு காரணமாகவும், கவனக்குறைவாகவும் இருந்ததற்காக தப்லீக் ஜமாத் தலைமை மதகுருவான மௌலானா சாத், ஜீஷன், முப்தி ஷெஜாத், எம் சைஃபி, யூனஸ், முகமது சல்மான் மற்றும் முகமது அஷ்ரப் என ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்த டெல்லி காவல்துறை, இவர்கள் தொற்று நோய் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை ஆணையர் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார். மேலும், மார்ச் 24 அன்று கொரோனா தொற்று குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அறிவித்த பிறகும் தங்களுடைய உறுப்பினர்களை கூட்டம் நடைபெற்ற கட்டடத்திலே தங்க வைத்திருந்ததாகவும், இந்த ஆறு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு தங்களது சொந்த மாநிலத்திற்கு திரும்பியவர்கள், நோய்த் தொற்றினை அதிகரிக்கச் செய்திருக்கின்றனர். இந்த கூட்டத்தில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களோடு சேர்ந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் அதன் உறுப்பினர்கள் என 2 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பங்கேற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மூன்று நாட்களில் தப்லிகி தலைமையகமான மார்கஸ் நிஜாமுதீனில் இருந்து 2,000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர்.
டெல்லி காவல்துறை குற்றப்பிரிவு "டெல்லி மார்க்கஜ்" யூடியூப் சேனலில் வெளியிடப்பட்ட ஒரு பிரசங்கத்தின் ஆடியோ பதிவை ஆய்வு செய்து வருகிறது, அதில் அரசாங்கம் அறிவுறுத்தும் சமூக தூரத்தை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்று பேச்சாளர் கூறுகிறார். கொரோனா வைரஸ் எச்சரிக்கைகளை "சக முஸ்லிம்களிடமிருந்து முஸ்லிம்களை விலக்கி வைக்கும் சதி" என்று பேச்சாளர் குறிப்பிடுகிறார்.
மேலும், "நீங்கள் மரணத்திலிருந்து எங்கு ஓடுவீர்கள்? மரணம் உங்களுக்கு முன்னால் இருக்கிறது ... இது கடவுளிடமிருந்து தவம் தேடும் சந்தர்ப்பமாகும். வைரஸ் உள்ளது. ஆனால் 70,000 தேவதைகள் என்னுடன் இருக்கிறார்கள், அவர்களால் என்னைக் காப்பாற்ற முடியாவிட்டால், வேறு யார் என்ன செய்வார்கள்? இது கூடுதலான கூட்டங்களுக்கான நேரம், ஒருவருக்கொருவர் தவிர்க்க வேண்டிய நேரம் அல்ல ... நாங்கள் சந்தித்தால் நோய் வரும் என்று யார் கூறுகிறார்கள் நோய் பரவுகிறது, ஆனால் ஒன்றாக கூடி பிராத்திப்பதால், அது நமக்கு பயனளிக்கும் ... இது முஸ்லிம்களுக்கு இடையேயான நட்பை முடிவுக்கு கொண்டுவருவதற்கும், ஒருவருக்கொருவர் அந்நியப்படுத்துவதற்குமான ஒரு திட்டமாகும் "என்று பேச்சாளர் கூறுகிறார், இவ்வாறு பேசியவர் மௌலானா சாத் என்றே சில அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
நாடு முழுவதும் இந்த கூட்டத்தில் பங்கேற்றவர்களில் 128 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையானது மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
கொரோனா தொற்று பரவல் குறித்து டெல்லி காவல் துறையும், அம்மாநில அரசும் எச்சரித்து மக்கள் திரள்களைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் நாடு முழுவதும் அமலாக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவுக்கு முன்பாகவே இங்கு வந்தவர்களாவார். மேலும், வெளியேற வாய்ப்பில்லாதவர்கள் எங்கு வேண்டுமானாலும் தங்கலாம் என்று பிரதமர் தனது ஒரு உரையில் குறிப்பிட்டிருப்பதை இவர்கள் மேற்கோள் காட்டினர்.
சர்வதேச அளவில் உறுப்பினர்களைக் கொண்ட இஸ்லாமியக் கொள்கை பரப்பு இயக்கமான தப்லிகி ஜமாஅத், மரபுவழியில் இஸ்லாமியர்கள் திரும்புவதை போதிக்கும் ஒரு இயக்கமாகும்.