துபாயிலிருந்து கர்நாடக மங்களூர் விமானநிலையம் வந்த பயணி ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால், அவரை மருத்துவமனை வரும் படி அறிவுறுத்திய நிலையில், அவர் சோதனைக்கு வராமல் தப்பியுள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பானது உலகம் முழுவதும் பெரும் பீதியை ஏற்படுத்திவரும் நிலையில், அனைத்து விமான நிலையங்களிலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கொரோனா அறிகுறி உள்ள ஒரு பயணியை மங்களூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்குச் சோதனைக்காக வரும்படி அறிவுறுத்திய நிலையில், அவர் அங்கு வரவில்லை எனத் தெரிகிறது.
இதுதொடர்பாக மாநில சுகாதாரத்துறை அளித்துள்ள தகவலில், அந்த பயணியை வென்லாக் மருத்துவமனை வரும் படி அறிவுறுத்திய நிலையில், அவர் மருத்துவமனை வரவில்லை.
இதைத்தொடர்ந்து, அந்த பயணி குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, அந்த பயணியின் வீட்டில் கண்காணிப்பு குழுவினர் முகாமிட்டுள்ளனர். அவர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு அனுமதிக்கப்படுவார் என அதிகாரிகள் குழு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 3,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது. தொடர்ந்து, இந்தியாவில் 42 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் 3வயதுக் குழந்தைக்கும், ஜம்மு - காஷ்மீரில் 63 வயது பெண்ணுக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் 3 வயதுக் குழந்தை அண்மையில் குடும்பத்தினருடன் இத்தாலி சென்று திரும்பியுள்ளது தெரியவந்துள்ளது. ஜம்முவில் உள்ள அந்த பெண் இரான் சென்று வந்ததாகத் தெரிகிறது.
தமிழகம் மற்றும் கேரளாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பெங்களூரில் மழலையர் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.