கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் 2வது முறையாக இந்திய அளவில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது மத்திய அரசு. மார்ச் 25 ஆம் தேதி, முதன்முறையாக ஊரடங்கு உத்தரவை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த நிலையில், நேற்று இரவு 2வது முறையாக அது நீட்டிக்கப்படுவது குறித்த அறிவிப்பை வெளியிட்டது அரசு. இதனால் மே 17 ஆம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு அமலில் இருக்கும். அதே நேரத்தில் கொரோனா பாதிப்பைப் பொறுத்து நாட்டில் உள்ள பகுதிகள் 3 வகைகளில் பிரிக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸின் தாக்கத்திற்கு ஏற்றாற் போல அமலில் உள்ள ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள பகுதிகள்:
சிவப்பு மண்டலம்: மிகவும் அதிக அளவில் கொரோனா பாதிப்பு இருக்குமிடம்.
கன்டெயின்மென்ட் மண்டலம்: சிவப்பு மண்டலத்திலேயே மிகவும் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ள பகுதி
ஆரஞ்சு மண்டலம்: கொரோனா வைரஸால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ள பகுதி
பச்சை மண்டலம்: கடந்த 21 நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படாத பகுதி
3வது ஊரடங்கு உத்தரவில் எவற்றுக்கெல்லாம் அனுமதி:
-அத்தியாவசியமுள்ள மற்ற அத்தியாவசியமற்ற தனியார் கடைகள், மக்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள கடைகள் திறந்திருக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
-33 சதவீத பணியாட்களுடன் பெரும்பான்மையான வியாபார மற்றும் தனியார் அலுவலகங்கள் திறந்திருக்க அனுமதி. பாக்கியுள்ள பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணி புரியலாம்.
-துணை செயலாளர் அளவில் உள்ள மூத்த அதிகாரிகளுடன் அரசு அலுவலகங்கள் செயல்படலாம். 33 சதவீத ஊழியர்களுக்கு நேரில் வந்து பணி செய்ய அனுமதி.
-அனைத்து மெடிக்கல் கிளினிக்குகளுக்கு சமூக விலகல் நடைமுறையைக் கடைபிடித்து செயல்பட அனுமதி. அதே நேரத்தில் கன்டெயின்மென்ட் மண்டலங்களில் அவற்றுக்கு அனுமதி கிடையாது.
-மருந்து உற்பத்தி உள்ளிட்ட அனைத்து உற்பத்தி நிறுவனங்களும் இயங்கலாம்.
-பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் மதுபானக் கடைகள் செயல்படலாம் (சில மாநில அரசுகள் அந்த மண்டலங்களிலும் மதுபானக் கடைகளை மூடிவைக்க முடிவெடுத்துள்ளன). கடையில் மது வாங்கும்போது ஒருவருக்கும் இன்னொருவருக்கும் குறைந்தபட்சம் 6 அடி இடைவெளி இருக்க வேண்டும். ஒரு கடையில் ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் இருக்கக் கூடாது.
-குறிப்பிட்ட சில பயணங்களுக்கு மட்டும் மக்கள் இரு சக்கர வாகனத்தில் ஒருவருடனும், நான்கு சக்கர வாகனத்தில் 2 பேருடனும் அனுமதிக்கப்படுவார்கள்.
-அச்சு மற்றும் மின்னணு ஊடகம், ஐடி மற்றும் ஐடி சார்ந்த சேவைகள், டேட்டா மற்றும் கால் சென்டர்கள், குளிர்சாதனக் கிடங்குகள் மற்றும் கிடங்கு சேவைகள், தனியார் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை சேவைகள், மற்றும் தனி நபர்களால் வழங்கப்படும் சேவைகளுக்கு அனுமதி. முடி திருத்தும் கடைகள் இயங்க அனுமதி கிடையாது.
-சிவப்பு மண்டலங்களில், இ-வர்த்தக நிறுவனங்கள் அத்தியாவசியப் பொருட்களை டெலிவரி செய்ய மட்டுமே அனுமதி. மற்ற மண்டலங்களில் அனைத்துப் பொருட்களையும் டெலிவரி செய்ய அனுமதியுண்டு.
-நகர்ப்புறங்களில் உள்ள கட்டுமானப் பணிகளை, இருக்கும் ஆட்களை வைத்து செய்து கொள்ளலாம். புதிதாக ஆட்கள் வரவழைக்கப்படக் கூடாது.
-கிராமப்புறங்களில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் உட்பட அனைத்துப் பணிகளுக்கும் அனுமதியுண்டு.
-வங்கிகள், வங்கி சாராத நிதித் துறை நிறுவனங்கள், பொதுவாக பயன்படுத்தப்படும் மின்சாரம், தண்ணீர், சுகாதாரம், இணையம் உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்பட அனுமதியுண்டு. கொரியர் அலுவலகங்களும் செயல்படலாம்.
-ஆரஞ்சு மண்டலங்களில் ஓலா, உபர் உள்ளிட்ட டேக்சி சேவைகளுக்கு அனுமதியுண்டு. ஆனால், டிரைவருடன் ஒருவர் மட்டுமே பயணிக்க முடியும்.
-பச்சை மண்டலங்களில் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ள சில நடவடிக்கைகள் மட்டும் அனுமதிக்கப்படாது. பச்சை மண்டலங்களில் பொதுப் போக்குவரத்தும், 50 சதவீத பயணிகளுடன் இயங்க அனுமதியுண்டு.
-அனைத்து சரக்கு வண்டிகளுக்கும் அனுமதியுண்டு.
-மிகவும் அதிக பாதிப்பில் உள்ள கன்டெயின்மென்ட் மண்டலங்களில், ஆரோக்ய சேது செயலி பயன்படுத்துவது கட்டாயமாகும். இந்த செயலி மூலம் ஒவ்வொரு நபரின் இருக்குமிடம், மருத்துவ மற்றும் பயண வரலாறு கொண்டு தொற்று ஏற்படுவது குறித்து கணிக்கப்படும். மருத்துவ அவசரங்களைத் தவிர வேறு எதற்கும் கன்டெயின்மென்ட் மண்டலங்களில் இருப்பவர்கள் பயணிக்க அனுமதி கிடையாது.
எவற்றுக்கெல்லாம் அனுமதி கிடையாது:
-விமானங்கள் மற்றும் ரயில்கள் மூலம் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு சாலை வழியாக செல்ல அனுமதி கிடையாது.
-பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடியே இருக்கும். அதேபோல மால்கள், உணவகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், முடி திருத்தும் கடைகள் திறக்க அனுமதி கிடையாது.
-மத மற்றும் அரசியல் சார்ந்த கூட்டங்களுக்கு அனுமதி கிடையாது.
-இரவு 7 மணியிலிருந்து காலை 7 மணி வரை பயணம் செய்ய யாருக்கும் அனுமதி கிடையாது.
-65 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் அனைத்து நேரங்களிலும் வீட்டிலேயே இருக்க வேண்டும்.
-சிவப்பு மண்டலங்களில் பொதுப் போக்குவரத்து மற்றும் டேக்சிகளுக்கு அனுமதி கிடையாது.