மத்திய பிரதேசத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் பயணித்த லாரி மீது அதிவேகமாக வந்த பேருந்து மோதியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 54 பேர் வரை காயமடைந்துள்ளனதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
நேற்றிரவு, உத்தர பிரதேசத்தில் அரசு பேருந்து மோதி 6 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து இந்த விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது. அடுத்தடுத்த விபத்து சம்பவங்களில் 14 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் குறித்து போலீசார் கூறும்போது, மகாராஷ்டிராவில் இருந்து உத்தர பிரதேசம் நோக்கி 70 புலம்பெயர் தொழிலாளர்களுடன் சென்றுகொண்டிருந்த லாரி மீது அதிவேகமாக வந்த பேருந்து மோதியது. இதில், 8 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். மேலும், 55 முதல் 60 பேர் காயமடைந்துள்ளனர். அதிகாலை 3 மணி அளவில் இந்த விபத்து நிகழந்துள்ளது. இதில் லாரியில் பயணித்த பெரும்பாலான தொழிலாளர்கள் உத்தர பிரதேசத்தின் உன்னாவோ மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள் என்று தெரிவித்தனர்.
அந்த பேருந்து குணாவில் இருந்து அகமதாபாத் நோக்கி சென்றுகொண்டிருந்துள்ளது. அதில், ஓட்டுநரும், கிளினரும் மட்டுமே இருந்துள்ளனர்.
இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, குணா பைபாஸ் சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் மும்பையில் இருந்து தங்களது சொந்த ஊரான உத்தர பிரதேசத்தில் உள்ள உன்னோவோ மாவட்டத்திற்கு சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது, குணாவில் இருந்து அகமதாபாத் சென்ற பேருந்து அவர்களது லாரியின் மீது மோதியுள்ளது. இதில், 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். மற்றவர்களை உன்னாவோ அனுப்பி வைக்க அனைத்து முயற்சியும் எடுத்து வருகிறோம் என்று அவர் கூறினார்.
இதேபோல், உத்தர பிரதேச நெடுஞ்சாலையில் நடந்த மற்றொரு கோர விபத்தில் நடந்து சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள் 6 பேர் உயரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து, பீகாரை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் பஞ்சாபில் இருந்து தங்களது சொந்த ஊருக்கு நடந்து சென்றுள்ளனர். இந்த விபத்து குறித்து முசாபர்நகர் மாவட்ட போலீசார் கூறும்போது, நேற்றிரவு 11 மணி அளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ஆளில்லாத அரசு பேருந்தை ஓட்டுநர் மட்டும் இயக்கி சென்றுள்ளார் என்றனர்.
சமீப நாட்களாக நாடு முழுவதும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பும் வழியில் பல்வேறு விபத்து சம்பவங்கள் நடந்து வருகின்றன. கடந்த வாரத்தில் மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் தண்டவாளத்தில் படுத்திருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் ஏறியதில் 16 பேர் உயிரிழந்தனர்.