கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் முழு முடக்க நடவடிக்கையானது அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக நாடு முழுவதும் வணிக ரீதியான விமான போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டது. இந்நிலையில் உள்நாட்டு விமான சேவையை நாளை முதல் துவங்கலாம் என சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்திருந்தார். ஆனால், நாட்டின் மிக முக்கிய நகரங்களான மும்பை, கொல்கத்தா, சென்னை போன்ற நகரங்களில் விமான சேவையை மீண்டும் தொடங்குவதற்கு அந்நகரங்களை கொண்ட மாநில அரசுகள் ஆட்சேபனை தெரிவித்துள்ளன.
நாட்டின் அதிக அளவு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. இம்மாநிலத்தில் மும்பையில் அதிகமானவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது மாநிலம் முழுவதும் பொது போக்குவரத்து மற்றும் டாக்ஸிகளுக்கான தடை இம்மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக விமான நிலையங்கள் செயல்பட தொடங்கினால் பயணிகள் விமான நிலையங்களிலிருந்து தங்கள் வீடுகளுக்கு செல்வதில் சிக்கல் ஏற்படும் என மாநில அரசு குறிப்பிட்டுள்ளது. மாநிலத்திற்குள் சிறப்பு விமானங்களுக்கு மட்டுமே அனுமதி என்கிற உத்தரவில் எவ்வித மாற்றத்தையும் மகாராஷ்டிரா கொண்டு வரவில்லை.
மேலும், "சிவப்பு மண்டலத்தில் விமான நிலையங்களை மீண்டும் திறப்பது மிகவும் தவறான ஆலோசனையாகும்" என்று மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் ட்வீட் செய்துள்ளார்.
அதே போல தமிழகத்தினை பொறுத்த அளவில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் இம்மாநிலம் உள்ளது. எனவே மாநில முதல்வர், உள்நாட்டு விமான போக்குவரத்தினை மாநிலத்தில் இம்மாத இறுதிக்கு பின்னர் தொடங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
இந்நிலையில் ஜூன் மாத தொடக்கத்தில் நாட்டில் சர்வதேச விமான போக்குவரத்து தொடங்கப்படும் என சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தினை பொறுத்த அளவில், ஆம்பன் புயல் காரணமாக விமான நிலையங்கள் பெரும் அளவு பாதிப்பதை சந்தித்துள்ளது. எனவே உள்நாட்டு விமான போக்குவரத்திற்கு இம்மாநில அரசு ஆட்சேபனை தெரிவித்துள்ளது. மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கு பதிலாக வட வங்காளத்தின் மிக சிறிய பாக்தோகிரா விமான நிலையத்திற்கு விமான போக்குவரத்து தொடங்கலாம் என மத்திய அரசுக்கு கடிதம் எழுத இருப்பதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இந்த சிக்கல்கள் குறித்து மாநிலங்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளதாகவும், விமான போக்குவரத்திற்கான அவசியத்தினை மாநில அரசுகளுக்கு தெரிவித்துள்ளதாகவும் ஹர்தீப் சிங் தெரிவித்துள்ளார். மேலும், இந்த உள்நாட்டு விமான போக்குவரத்தினை கால தாமதப்படுத்தும் மாநிலங்களின் கோரிக்கையை எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்க மத்திய அரசு கேட்டுள்ளதாகவும், ஆனால், மாநிலங்கள் இன்னும் சமர்ப்பிக்கவில்லை என்றும் ஹர்தீப் சிங் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் பயணிகள் விமான நிறுவனங்களான இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ஏர் ஏசியா இந்தியா மற்றும் விஸ்டாரா ஆகியவை திங்கள்கிழமை முதல் விமானங்களுக்கான முன்பதிவுகளை செய்யத் தொடங்கியுள்ளன. ஆனால், கோ ஏர் நிறுவனம், மத்திய அரசின் முறையான விதிமுறைகளுக்காக காத்திருப்பதாக கூறியுள்ளது.
மாநிலங்களில் நுழையக்கூடிய பயணிகளுக்கான நிபந்தனைகள் குறித்த தெளிவான அறிக்கைக்காக நிறுவனம் காத்திருப்பதாக கோ ஏர் தெரிவித்துள்ளது. இந்த நிபந்தனைகள் குறித்த தெளிவு இல்லாமல் நிறுவனம் முன்பதிவினை திறக்காது என நிர்வாகம் தெரிவித்துள்ளது. சரியான தெளிவு இல்லாமல் விமானங்கள் இயக்கப்படுமாயின் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாவார்கள். எனவே விமான சேவை தொடக்கம் என்பது மே 25 அல்லது மே 31 என எந்த தேதியென மத்திய அரசு உறுதி செய்திட நிர்வாகம் காத்திருக்கின்றது. என கோ ஏர் நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.