ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்பு தமிழகத்தில் உள்ள கோயில்களையும் விட்டு வைக்கவில்லை. கட்டுப்பாடுகளால் கோயில்கள் கோடிக்கணக்கில் இழப்பை சந்தித்து வருகின்றன. அதேநேரத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு பல்வேறு கோயில்களில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 24-ம்தேதியில் இருந்து அனைத்துக் கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், பக்தர்கள் மூலமாக கோயில்களுக்கு கிடைக்கும் வருவாய் கணிசமாக குறைந்துள்ளது.
இதுகுறிதது இந்து அறநிலையத் துறையின் அதிகாரிகள் கூறுகையில், 'தமிழகத்தில் 150 முக்கிய கோயில்களில் வருமானம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் தொகையால்தான் வருமானம் இருந்தது. முக்கிய கோயில்களில் ஊரடங்கு நடவடிக்கையால் ரூ. 40 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஊரடங்கு முடிந்து இயல்பு நிலை திரும்பினால் மட்டுமே எவ்வளவு இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை மதிப்பிட முடியும்.' என்று தெரிவித்தனர்.
தமிழகத்தின் பழம்பெரும் கோயில்களில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி கோயிலில், பக்தர்களின் காணிக்கையை தவிர்த்து, பஞ்சாமிர்தம், ரோப் கார்கள் மூலம் வருமானம் கிடைத்தது. இவற்றையும் ஊரடங்கு விட்டு வைக்கவில்லை.
சென்னையில் உள்ள முக்கிய கோயில்களான ஸ்ரீ பார்த்தசாரதி, ஸ்ரீகபாலீஸ்வரர், வடபழனி ஆண்டவர் கோயில், மதுரையி மீனாட்சி அம்மன் கோயில், கன்னியாகுமரியில் பகவதி அம்மன் கோயில்களிலும் உண்டியல் வருமானம் பாதிப்பை சந்தித்துள்ளது.
பக்தர்களின் காணிக்கை தொகையிலிருந்து அன்னதானம் வழங்கும் திட்டத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடங்கினார். இந்த திட்டத்தின் கீழ், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு உணவு அளிக்கப்பட்டு வருவதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.