கடந்த 2 மாதங்களில் கொரோனா பாதிப்பால் குஜராத்தில் மட்டும் 30 ஆயிரம் திருமணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த தகவலை ஓட்டல்கள், திருமண மண்டபங்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அதன் செய்தி தொடர்பாளர் அபிஜித் தேஷ் முக் கூறுகையில், 'குறைந்தது 30 ஆயிரம் திருமணங்களாவது ரத்து செய்யப்பட்டிருக்கும். அல்லது ஒத்தி வைக்கப்பட்டிருக்கும். இதற்கு கொரோனா பாதிப்புதான் ஒரே காரணம்.
வழக்கமாக மார்ச் மற்றும் ஏப்ரல்தான் அதிக திருமணங்கள் நடக்கும் மாதங்களாகும்.
கொரோனா பாதிப்பு காரணமாக மிக பிரமாண்டமாக நடைபெறும் திருமணங்கள் எல்லாம் 8 - 10 பேர் முன்னிலையில் மிக எளிமையாக நடந்து முடிந்துள்ளன. இதனால் பல பேருக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டிருக்கிறது.
கடந்த 18 ம்தேதியில் இருந்து மாநிலத்தில் பொது முடக்க கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஆனால், ஓட்டல்கள், வழிபாட்டுத் தலங்களுக்கு தளர்வு ஏதும் கொடுக்கப்படவில்லை. இதனாலும் திருமண நிகழ்ச்சிகள் பாதிப்பு அடைந்தன.
ரத்து செய்யப்பட்ட திருமணங்களை நடத்துவதற்காக நல்ல நாள் பார்க்கப்பட்டு வருகிறது. அனேகமாக டிசம்பர் அல்லது ஜனவரியில் திருமணங்கள் நடைபெற வாய்ப்பு இருக்கிறது.
மாஸ்க் அணிந்திருந்த நிலையில் யாரேனும் திருமணத்திற்கு புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்புவார்களா? வெறும் 50 பேருக்கு மட்டும் நம்மால் உணவு தயாரிக்க முடியாது. இத்தகைய காரணங்களால்தான் திருமணங்கள் ரத்து செய்யப்பட்டு, நிலைமை சீரடைவதை மணமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
சிலர் இப்போது சிம்பிளமாக திருமணம் முடித்துக்கொண்டு நிலைமை சீரடைந்ததும், வரவேற்பை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.' என்று தெரிவித்தார்.