கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை மே.29ம் தேதி வரை நீட்டித்து தெலுங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் 3வது கட்ட ஊரடங்கு மே.17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தெலுங்கானாவில் மேலும் 12 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தெலுங்கானாவில் நேற்றைய தினம் சுமார் 7 மணி அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் சந்திரசேகர ராவ் கூறும்போது, மக்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என விரும்புகிறார்கள். இந்த முடிவு குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தகவல் தெரிவித்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.
தெலுங்கானாவில் 6 மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாக உள்ளன. 18 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலமாகவும், 9 மாவட்டங்கள் பச்சை மண்டலமாகவும் உள்ளன. 3 மாவட்டங்களில் அதிகபட்சமாக பாதிப்பு எண்ணிக்கை உள்ளது.
இந்நிலையில், மத்திய அரசு சிவப்பு மண்டலங்களிலும் கடைகளை திறக்கலாம் என்று முன்னர் உத்தரவிட்டது. எனினும், ஐதராபாத், மெத்சால், சூர்யாபேட், விக்ராபாத் உள்ளிட்ட பகுதிகளில் கடைகளை திறக்க மாநில அரசு அனுமதிக்கவில்லை.
தெலுங்கானாவில், இதுவரை 1,096 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 439 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 628 பேர் குணமடைந்துள்ளனர். மத்திய அரசு மூன்றாவது முறையாக ஊரடங்கை நீட்டிப்பதற்கு முன்பாகவே, அம்மாநிலத்தில் மே.7ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.
தொடர்ந்து, உள்மாநில அறிக்கைகள் மாநிலத்தில் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பரிந்துரைந்துள்ளன. குறிப்பாக ஐதராபாத்தை சுற்றியுள்ள ரங்கா ரெட்டி, மெத்சால், விக்ராபாத் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கட்டாயம் தடையை நீட்டிக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் மொத்தம் பாதிக்கப்பட்ட 1,085 பேரில் 717 பேர் (66.08%) இந்த 4 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
அதேபோல், உயிரிழந்தவர்களில் 82.21 சதவீதம் பேர் இந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்தான். தொடர்ந்து, கடந்த 10 நாட்களாக இந்த மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதனால், இந்த நான்கு மாவட்டங்களிலும் ஊரடங்கை தளர்த்த வேண்டாம் என்றும், மேலும் தீவிரமாக ஊரடங்கை நீட்டித்து கடைபிடிக்க வேண்டும் என்று அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
தொடர்ந்து, ஊரடங்கை தளர்த்துவது குறித்து மே.15ம் தேதி ஆய்வு செய்யப்படும் என்று முதல்வர் சந்திரசேகர ராவ் கூறியுள்ளார்.