கேரளாவில் 50 சதவீத பணியாளர்களுடன் வணிக வளாகங்கள் செயல்படுவதற்கு மாநில அரசு அனுமதி அளித்து, இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதேபோன்று சலூன் கடைகள் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை தொடர்ந்து கேரளாவில் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும், சென்னை உள்ளிட்ட சில இடங்களை தவிர்த்து மற்ற பகுதிகளில் சலூன் கடைகள் நாளை முதல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், 'அனைத்து வணிக வளாகங்கள் மற்றும் சலூன் கடைகள் 50 சதவீத பணியாளர்களுடன் மட்டும் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
பயிற்சி நிறுவனங்கள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருக்கும். ஆன்லைன் கல்விக்கு தடையில்லை.
புதிதாக 29 பேருக்கு கொரோனா பாதிப்பு கேரளாவில் ஏற்பட்டிருக்கிறது. இதனால் மொத்த பாதிப்பு 630 ஆக உயர்ந்துள்ளது. டிஸ்சார்ஜ் அடைந்தவர்கள், உயிரிழப்பை தவிர்த்து தற்போது 130 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை எடுத்து வருகின்றனர்' என்றார்.