நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1.90 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் பயணிகள் ரயில் சேவைக்காக 200 ரயில்கள் புதியதாக இன்று முதல் இயக்கப்பட உள்ளன. ஜூன் 30 வரை மத்திய அரசு நாடு முழுவதும் முழு முடக்க நடவடிக்கையை தளர்வுகளுடன் நீட்டித்துள்ள நிலையில், தளர்வுகளின் ஒரு பகுதியாக ரயில்வே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதில் குளிர்சாதன வசதி அல்லாத ரயில் பெட்டிகளும் இணைக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இரண்டாவது கட்டமாக தற்போது தொடங்கப்பட்டுள்ள ரயில் சேவையில் நாடு முழுவதும் ஒரே நாளில் 1.45 லட்சம் பயணிகள் பயணிக்கின்றனர். இம்மாத காலகட்டத்தில் மொத்தமாக 26 லட்சம் பயணிகள் ரயில் சேவையை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போது இயக்கப்படக்கூடிய ரயில்களில், ஏசி மற்றும் ஏசி அல்லாத பெட்டிகளும், பொது வகுப்பு பெட்டிகளும் இருக்கும். ஆனால், பொது வகுப்பு பெட்டிகளில் முன்பதிவு இல்லாமல் பயணிகள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
இவ்வாறு முன் பதிவு செய்யும் போது பொது வகுப்பு பெட்டிகளில் அனைத்து பயணிகளுக்கும் இருக்கைகள் உறுதி செய்யப்படுகின்றது. இதற்கான கட்டணங்கள், இரண்டாம் வகுப்பு பயணத்திற்கான கட்டணங்கள் போல வசூலிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதேபோல பயணிகள் பயணத்திற்கு 90 நிமிடங்களுக்கு முன்னதாக ரயில் நிலையத்தில் இருக்க வேண்டும். உறுதி செய்யப்பட்ட பயண சீட்டுகளை கொண்டவர்கள் மட்டுமே ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். பயணத்திற்கு முன்னதாக உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்படும். தொற்று அறிகுறிகள் இல்லாதவர்கள் மட்டுமே பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். பயணிகள் அனைவரும் ஆரோக்ய சேது செயலியை பயன்படுத்த வேண்டும்.
பயணிகள் பயணத்தின்போது தனி மனித இடைவெளியையும், முகக் கவசங்களையும், கிருமி நாசினிகளையும் பயண்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் தனித்தனி நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் இருப்பதை உறுதி செய்ய மண்டல ரயில்வேக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக பயணிகள் நேருக்கு நேர் சந்தித்துக்கொள்வது தவிர்க்கப்படுகின்றது.
தற்போது இயக்கப்படக்கூடிய 200 ரயில்களில், புலம் பெயர்ந்தோருக்கான சிறப்பு ரயில்கள் ஏதும் இல்லை. முன்னதாக 3,840 ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் மூலமாக 52 லட்சத்திற்கும் அதிகமான புலம் பெயர் தொழிலாளர்கள் அவர்களுடைய சொந்த மாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முழு முடக்க நடவடிக்கைக்கு முன்னர் ரயில்வே நாளொன்றுக்கு 12 ஆயிரத்திற்கும் அதிகமான ரயில்களை இயக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.