நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்திருக்கக்கூடிய நிலையில், நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இதனால் பெரும்பாலான புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் வேலை செய்த இடத்திலேயே முடக்கப்பட்டனர். சில தினங்களுக்கு முன்பாக சில தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு நடந்தே சென்றனர். இதில் பலர் உயிரிழந்தனர். இதனால் மத்திய அரசு புலம் பெயர் தொழிலாளர்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளை அந்தந்த மாநிலங்கள் கவனத்தில் கொண்டு பூர்த்தி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.
பொது மற்றும் தனியார் போக்குவரத்துக்கள் முற்றிலுமாக முடக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில், மும்பை பாந்த்ராவில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் திடீரென ஒன்று கூடி தங்கள் ஊர்களுக்குத் திரும்ப முயன்றுகொண்டிருந்தனர். ஊரடங்கு அமலில் உள்ளதாலும், இவ்வாறு கூட்டமாகக் கூடுவதால் தொற்று பரவும் அபாயம் ஏற்படும் என்பதாலும் காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தினை கலைத்தனர்.
இவ்வாறாகத் தொழிலாளர்களும் உழைப்பாளி மக்களும் ஒரே நேரத்தில் கூட்டமாகக் கூடியதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், வினய் துபே என்கிற நபரை கைது செய்தனர். இவர் சமூக வலைத்தளங்களில், “வீட்டிற்கு செல்வோம்” என பிரச்சாரத்தினை முன்வைத்து தனது வலைத்தள பக்கங்களில் தொடர்ந்து இடுகைகளை பகிர்ந்திருக்கிறார். இதனால் புலம் பெயர் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கில் ஒன்றுகூடினர்.
ஏற்கெனவே பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முழு முடக்க(lockdown) நடவடிக்கையினை அறிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்று நாட்டு மக்களிடையே உரையாற்றிய மோடி, 21 நாட்கள் அறிவிக்கப்பட்டிருந்த முழு முடக்க நடவடிக்கையானது மே 3 வரை நீட்டிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ஜன் சதர்ன் என்கிற சிறப்பு ரயிலினை இயக்குவது குறித்தான ரயில்வே துறையின் கூட்டத்தினையொட்டி இந்த வதந்தி பரப்பப்பட்டிருக்கிறது. இதை பரப்பியவர்கள், சட்டத்திற்கு புறம்பான முறையில் ஒன்று கூடியவர்கள் என 1,000 க்கும் அதிகமானவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர்.
தங்களுக்கான பேருந்துகள் பாந்த்ராவில் கிடைக்கும் என நம்பிய தொழிலாளர்கள் நேற்று இரவு ஒன்றாக திரண்டனர். இவர்களில் பெரும்பாலும் வங்காளம், பீகார், உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்திலிருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களே. ட்விட்டர், பேஸ்புக் என அனைத்து வலைத்தளங்களிலும், வினய் துபே பேருந்து குறித்த வதந்திகளைப் பரப்பியுள்ளார். இதனால் நேற்று இரவு மும்பையில் அவரது வீட்டில் வைத்து அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் வினய் வெளியிட்டுள்ள காணொளி ஒன்றில், இந்த முழு முடக்க நடவடிக்கை ஏப்ரல் 14 அன்று முடிவடையும். நான் 40 பேருந்துகளை ஏற்பாடு செய்திருக்கிறேன் அவற்றை இயக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மேலும்,
உ.பி., பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளத்திற்கு ரயில்களை மாநில அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என தான் கேட்டுக்கொள்வதாகவும், இல்லையெனில் அவர்கள் பசிக் கொடுமையால் இறக்க நேரிடும் என்றும், அரசு இவர்களுக்கு ஏப்ரல் 14,15 தேதிகளில் போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்யவில்லையெனில் நான் நடந்தே அவர்களோடு சேர்ந்து பயணிப்பேன் என்று வினய் கூறியுள்ளார்.
உ.பி.யைச் சேர்ந்த துபே, உத்தர பாரதிய மகா பஞ்சாயத்து என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் தேர்தலிலும் போட்டியிட்டுள்ளார்.
தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை என பிரதமர் முன் அறிவிப்பு ஏதுவுமின்றி இந்த முழு முடக்க நடவடிக்கை அறிவித்திருந்தார். இதால் விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. சிறு குறு தொழில்கள் ஏற்கெனவே நட்டத்தில் இயங்கி வந்திருந்த நிலையில் தற்போது அவை முற்றிலுமாக முடங்கியுள்ளன. அங்கு வேலை செய்த லட்சக்கணக்கான முறை சாரா தொழிலார்களை அந்த சிறு குறு நிறுவனங்களால் பாதுகாக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் அந்த இடங்களிலிருந்து விரட்டப்பட்டுள்ளனர். ஏற்கெனவே 4-5 சதவிகித அளவு இருந்த வளர்ச்சி விகிதம், இனி 2-3 சதவிகிதமாகக் குறையும் என உலக வங்கி இந்தியாவை எச்சரிக்கை செய்திருந்தது. இந்த விகிதங்கள் நேரடியாக முறைசாரா தொழிலாளர்களையும் மறைமுகமாகச், சிறு குறு தொழில் செய்பவர்களையும் பெரிய அளவில் பாதித்திருக்கின்றது.
தங்கள் ஊர்களுக்குக் கால் நடைப் பயணமாகப் புறப்பட்ட தொழிலாளர்கள் தடுக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான உணவு மற்றும் அடிப்படை சுகாதார வசதிகள் பெரும் கேள்விக்குறியாக உள்ளதாகப் புலம் பெயர் தொழிலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
World
India
State & District Details
State | Cases | Active | Recovered | Deaths |
---|