கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் முழு முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக முடங்கியுள்ளது. முழு முடக்க நடவடிக்கையின் பத்தாவது நாளில் இந்தியா தற்போது உள்ளது.
இந்த நிலையில் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி மக்களிடையே சமீபத்தில் உரையாற்றினார். “கொரோனா தொற்று நோயால் நாடு எதிர்கொண்டிருக்கும் இருளினை போக்குவதற்கு, மக்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை (நாளை) இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்து அகல் விளக்குகள், மெழுகுவர்த்திகள், அல்லது டார்சு விளக்கினை பயன்படுத்த வேண்டும். ” என்று கேட்டுக்கொண்டார். மேலும், இந்த முழு முடக்க நடவடிக்கை காலத்தில் யாரும் தனிமையில் இல்லை. 130 கோடி மக்களும் இணைந்திருக்கிறோம். என்றும் பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.
பிரதமரின் இந்த அறிவிப்பானது, அவசரக் கால சேவையை பாதிக்கும் என மகாராஷ்டிரா மின்சார துறை அமைச்சர் நிதின் ராவுத் தெரிவித்திருக்கிறார். “அனைத்து வீடுகளிலும் ஒரே நேரத்தில் மின் விளக்குகளையும் அணைப்பது அவசரக் கால சேவையை பாதிக்கும். எனவே மக்கள் இதனை மறுபரீசிலனை செய்ய வேண்டும்.” என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அதாவது, “ஏற்கெனவே முழு முடக்க நடவடிக்கை அமலில் இருப்பதால், மின் நுகர்வு 23,000 மெகாவாட்டிலிருந்து 13,000 மெகாவாட்டாக குறைந்திருக்கின்றது. இந்த நிலையில் குறிப்பிட்ட ஒரே நேரத்தில் அனைத்து மின் விளக்குகளையும் அணைப்பது என்பது, மின்சார விநியோகத்தில் தடையை ஏற்படுத்தும். இது அவசரக் கால சேவையை பாதிக்கும். இதனை சீராக்க 12 முதல் 16 மணி நேரம் ஆகலாம். கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காப்பதில் மின்சாரம் மிக முக்கிய கருவி.” என்று விளக்கியுள்ளார்.
பிரதமரின் இந்த கோரிக்கைக்கு எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து பல்வேறு விமர்சனங்கள் வந்திருக்கின்றன. “சாமானிய மக்களின் வாழ்வாதார பிரச்சினைகள் குறித்தும், அவர்களின் வருமானம், அவர்களின் வலியை போக்குவது குறித்தும் எவ்வித அறிவிப்பும் பிரதமர் செய்யவில்லை. தற்போது நடைமுறையில் இருக்கும் முழு முடக்க அறிவிப்பிற்கு பிறகான இயல்பு நிலை திரும்புவது குறித்த அறிவிப்பும் ஏதும் பிரதமர் தெளிவுபடுத்தவில்லை. இவர் தேசத்தின் புகைப்பட(photo op) பிரதமர்.” என்று காங்கிரஸ் தலைவர் சசிதரூர் ட்விட்டரில் தனது விமர்சனத்தை பதிவு செய்திருக்கிறார்.
“மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8 முதல் 10 சதவிகிதம் வரை நிதியினை இந்த முழு முடக்க நடவடிக்கை அமலில் உள்ள காலகட்டத்தில் மக்களுக்கு வழங்க வேண்டும். கட்டுமானம் போன்ற சாமானிய மக்களுக்கு நிவாரணம் கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும். இதை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டங்கள் உள்ளன. எனவே பிரதமர் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். போலி செய்திகளைக் கட்டுப்படுத்துகிறோம் என்கிற பெயரில் உண்மை செய்திகளைத் தனிக்கை செய்யாதீர்கள்.” என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
“இவர்கள் ஏன் எல்லா விடயத்தையும் ஒரு நிகழ்வாக மாற்ற விரும்புகின்றார்கள்? இது சிறுபிள்ளைத்தனமாகும், முட்டாள் தனமாகும்.” என்று மகாராஷ்டிரா வீட்டுவசதி துறை அமைச்சர் ஜிதேந்திர அவாத் கேள்வியெழுப்பியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என 2,900க்கும் அதிகமானோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 68 பேர் இந்த தோற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். சர்வதேச அளவில் 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், 50,000க்கும் அதிகமான மக்கள் இந்த தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் இந்த தொற்றை தடுப்பதற்கு சமூக விலகலே மிகச் சரியான வழி என பிரதமர் அறிவுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
World
India
State & District Details
State | Cases | Active | Recovered | Deaths |
---|