உத்தர பிரதேசத்தில் நெடுஞ்சாலையில் நடந்து சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள் மீது அரசு பேருந்து மோதியதில் 6 பேர் உயரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் மேலும், 2 பேர் படுகாயமடைந்துள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து, பீகாரை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் பஞ்சாபில் இருந்து தங்களது சொந்த ஊருக்கு நடந்து சென்றுள்ளனர். உயிரிழந்தவர்களில் 4 பேர் கோபால்கன்ஜ் பகுதியை சேர்ந்தவர்கள், மற்ற இருவரும் பாட்னா மற்றும் போஜ்பூரை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
இந்த விபத்து குறித்து முசாபர்நகர் மாவட்ட போலீசார் கூறும்போது, நேற்றிரவு 11 மணி அளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ஆளில்லாத அரசு பேருந்தை ஓட்டுநர் இயக்கி வந்துள்ளார் என்றனர்.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள மொபைல் வீடியோ ஒன்றில், விபத்தை சம்பவத்தை நேரில் பார்த்தவரிடம் போலீசார் கேள்வி எழுப்புகின்றனர். அவர் கூறும்போது, அவர்கள் நடந்து சென்றுகொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது. 5 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 2 அல்லது 3 பேர் உயிருடன் உள்ளனர் என்கிறார்.
அந்த விபத்து காட்சிகளில், உயிரிழந்தவர்களின் உடல்கள் சாலையில் கிடத்தப்பட்டுள்ளன. முகத்தில் படுகாயமடைந்த புலம்பெயர் தொழிலாளர் ஒருவரை அதிர்ச்சியில் இருந்து மீட்டுக்கொண்டிருக்கிறார்.
முன்னதாக, நேற்றைய தினம் உத்தர பிரதேச அரசு வெளியிட்ட ஒரு அறிக்கையில், எக்காரணம் கொண்டும், புலம்பெயர் தொழிலாளர்கள் சாலையில் நடந்து செல்லக்கூடாது என்பதை உறுதிப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது.
இதுதொடர்பாக உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தனது ட்விட்டர் பதிவில் கூறும்போது, முசாபர்நகர் பேருந்து விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எனது ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறேன். முதலில் ரயில் தற்போது, பேருந்து விபத்து, ஏன் தொழிலாளர்களின் உயிர் இவ்வளவு மலிவானதா? நாட்டின் ஏழைகள் வந்தே பாரத் திட்டம் மூலம் சொந்த ஊர் திரும்ப முடியாதா? தரையில் இருக்கும் தொழிலாளர்களை புறக்கணித்து, உயரத்தில் பறப்பது சரியல்ல என்று அவர் தெரிவித்துள்ளார்.
சமீப நாட்களாக நாடு முழுவதும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பும் வழியில் பல்வேறு விபத்து சம்பவங்கள் நடந்து வருகின்றன. கடந்த வாரத்தில் மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் தண்டவாளத்தில் படுத்திருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் ஏறியதில் 16 பேர் உயிரிழந்தனர்.