கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து தடுப்பு நடவடிக்கையாக Work from Home சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
New Delhi: கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நடவடிக்கையாக மத்திய அரசு ஊழியர்கள் பாதிப்பேருக்கு வீட்டிலிருந்தே பணி செய்யும் Work from Home சலுகை அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் குரூப் பி மற்றும் சி-யில் உள்ள ஊழியர்கள் பாதிப்பேர் மட்டும் அலுவலகத்திற்கு வரவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக மத்திய பணியாளர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது-
துறை தலைவர்கள் அனைவரும் குரூப் பி மற்றும் சி பிரிவு ஊழியர்களுக்கான வாரப்பணி திட்டத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். முதல் வாரத்தில் துறைத் தலைவர்கள் அலுவலத்திற்கு அருகே, வசிப்பவர்கள் அவர்களது சொந்த வாகனத்தை பயன்படுத்தி அலுவலகத்திற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
காலை 9 - மாலை 5.30, காலை 9.30 - மாலை 6 மணி, காலை 10 - மாலை 6.30 என பணி நேரத்தை வரையறுத்துக் கொள்ள வேண்டும்.
வீட்டிலிருந்து பணி செய்யும் அதிகாரிகள், ஊழியர்கள் தொலைப் பேசி அழைப்புகளுக்கும், மற்ற எலக்ட்ரானிக் அழைப்புகளுக்கும் பணி நேரத்தில் எப்போது தயாராக இருக்க வேண்டும். ஏதேனும் எமர்ஜென்ஸி பணிகள் இருந்தால் அலுவலகத்திற்கு உடனடியாக அவர்கள் வர வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த Work from Home சலுகை ஏப்ரல் 4-ம்தேதி வரை வழங்கப்படுகிறது.
Work from Home தொடர்பாக மத்திய பணியாளர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை
இருப்பினும், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு இந்த சலுகை பொருந்தாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக பணியாளர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து தற்காத்துக்கொள்ள, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய பணியாளர் நலத்துறை கேட்டுக் கொண்டிருந்தது. இந்த அறிவிப்பு வந்த 2 நாட்களில் Work from Home சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
இன்னொரு நடவடிக்கையாக, அரசு அலுவலகங்களுக்கு பார்வையாளர்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். வாய்ப்புள்ள இடங்களில் சானிட்டைசர்கள், தெர்மல் சோதனை கருவிகள் வைக்கப்பட்டுள்ளன.
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுபவர்கள், வயது முதிர்ந்தவர்கள், ஏற்கனவே பல சிகிச்சைகளை பெற்று வருவோர், கர்ப்பிணிகள் ஆகியோர் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
![d3qne14o]()
முன்னெச்சரிக்கையாக இருக்கும்படி ஊழியர்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது
நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவது மெல்ல மெல்ல அதிகரித்து வரும் சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இருப்பினும், அவை திருப்திகரமாக இல்லையென்று காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் ராகுல் காந்தி, சிதம்பரம் உள்ளிட்டோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்தியாவின் சர்வதேச எல்லைகள் மூடப்பட்டுள்ளதோடு, வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் சோதனை செய்யப்படுகின்றன. நாடு முழுவதும் மால்கள், ஜிம், நீச்சல் குளங்கள், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபே மாகாணம் வுஹானில் தோன்றிய கொரோனா வைரஸ், இன்று 170-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில் இதனால் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகம் முழுவதும் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் உயிரிழப்பு 9 ஆயிரத்தை தாண்டியுள்ளது.