கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தாஜ்மஹால் இன்று முதல் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்று சுற்றுலா அமைச்சகம் திங்களன்று தெரிவித்துள்ளது. 1.3 பில்லியன் மக்களைக் கொண்ட உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியா முழுவதும் திரையரங்குகள் உட்பட பெரும்பாலான பள்ளிகள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளன.
இந்தியாவில் 114 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இரண்டு இறப்புகளும் பதிவாகியுள்ளன. உலகளவில், 142 நாடுகளில் 168,000 க்கும் அதிகமான தொற்றுநோய்களுடன் 6,500 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
" அனைத்து நினைவுச்சின்னங்கள் மற்றும் அருங்காட்சியகங்களும் மார்ச் 31 வரை மூடப்பட வேண்டும்" என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரஹ்லாத் படேல் திங்கள்கிழமை பிற்பகுதியில் ட்வீட் செய்திருந்தார்.
ஐ.நா கலாச்சார நிறுவனமான ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ) வெள்ளை பளிங்கு தாஜ்மஹாலை "இஸ்லாமியக் கலையின் ஆபரணம்" என்று அழைக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோர் கடந்த மாதம் தனது உத்தியோக பூர்வ இந்தியப் பயணத்தின் போது இந்த இடத்திற்கு விஜயம் செய்தனர்.
நாட்டிற்கு புதியதாக வரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளையும் இந்தியா நிறுத்தியுள்ளதுடன், ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பியச் சுதந்திர வர்த்தக சங்கம், துருக்கி மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளின் விமானங்களைப் புதன்கிழமை முதல் தடை செய்யும்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், ஓமன் மற்றும் குவைத் வழியாக வரும் அல்லது பயணிக்கும் பயணிகள் இந்தியாவுக்கு வரும்போது 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று அரசாங்கம் திங்கள்கிழமை அறிவித்திருந்தது.
சீனா, இத்தாலி, ஈரான், தென் கொரியா, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் ஏற்கனவே இதே போன்ற கட்டுப்பாடுகள் உள்ளன, அதே நேரத்தில் அண்டை நாடான பங்களாதேஷ் மற்றும் மியான்மாருடனான பெரும்பாலான எல்லை பாதைகள் மூடப்பட்டுள்ளன.