This Article is From Jun 25, 2020

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4.73 லட்சமாக உயர்வு!

இதில் கிட்டதட்ட 2.7 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். 14,894 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4.73 லட்சமாக உயர்வு!

Coronavirus Cases, India: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4.73 லட்சமாக உயர்வு!

ஹைலைட்ஸ்

  • கடந்த 24 மணி அதிகபட்சமாக 16,992 பேர் கொரோனாவால் பாதிப்பு
  • மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 4.73 லட்சமாக உயர்வு
  • கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 418 பேர் உயிரிழப்பு
New Delhi:

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவு கடந்த 24 மணி அதிகபட்சமாக 16,992 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 4.73 லட்சமாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

முதல்முறையாக ஒரே நாளில் 16,000க்கும் அதிகமானோர் புதிதாக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் ஒரே நாளில் 15,968 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். 

மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் கிட்டதட்ட 2.7 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். இதனால், குணமடைபவர்களின் விகிதமானது 57.42 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 14,894 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 418 பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யாவை தொடர்ந்து இந்தியா 4வது இடத்தில் உள்ளது. 

இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், தமிழகம் மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் கொரோனா வைரஸூடன் தொடர்புடைய 80 சதவீத இறப்புகள் பதிவாகியுள்ளன.  இதில் மிக மோசமாக மகாராஷ்டிராவில் 6,739 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, டெல்லியில் 2,365 பேர் உயிரிழந்துள்ளனர். 

குஜராத்தில் இதுவரை 28,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,735 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் 866 பேரும், உ.பி.யில் 596 பேரும் உயிரிழந்துள்ளனர். 

இதுவரை, அந்தமான் மற்றும் நிக்கோபார், அருணாச்சல பிரதேசம், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து மற்றும் சிக்கிம் உள்ளிட்ட ஏழு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தொற்றுநோய்களின் தொடக்கத்திலிருந்து கொரோனா வைரஸுடன் தொடர்புடைய எந்த மரணங்களையும் பதிவு செய்யவில்லை என்று அரசு தரவுகள் தெரிவித்துள்ளன. 

இதுவரை மொத்தமாக வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2,71,697 பேர் குணமடைந்துள்ளனர்; 14,894 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், தொற்று நோயுடன் தொடர்புடைய 418 மரணங்கள் பதிவாகியுள்ளன. குணமடைபவர்களின் விகிதமானது இன்று காலை நிலவரத்தின் படி 57.42 சதவீதமாக உள்ளது.

.