சர்வதேச அளவில் கொரோனா தொற்று வெறும் உயிரிழப்புகளையும், சுகாதார பாதிப்புகளை மட்டும் ஏற்படுத்திவிடவில்லை. மாறாக, பொருளாதாரத்தில் பெரிய அளவில் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு ஆசிய நாடுகள் வறுமை ஒழிப்பில் கடந்த நாற்பது ஆண்டுக்கால முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள், முயற்சிகள் போன்றவற்றிற்கு சவாலாக தற்போது கொரோனா தொற்று விளங்குகிறது என உலக வங்கி சமீபத்தில் குறிப்பிட்டுள்ளது. தெற்காசியாவில் உள்ள இந்தியா, பங்களாதேஷ், பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பிற சிறிய நாடுகளின் மக்கள் தொகையானது கிட்டதட்ட 1.8 பில்லியனாக உள்ளது. ஆனால், இந்த நாடுகளில் கொரோனா தொற்றின் பாதிப்புகள் குறைந்த அளவே உள்ளன. ஆனால், பின்வரும் வாரங்களில் இது அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகின்றது.
ஏற்கெனவே பொருளாதார மந்த நிலை என்பது நீடித்து வந்துள்ள காலகட்டங்களில், கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட முழு முடக்க (LOCKDOWN) நடவடிக்யைின் காரணமாக விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. முறைசாரா பல தொழிலாளர்கள் தங்களின் வேலையை இழந்துள்ளனர்.
தெற்காசியா மோசமான விளைகளில் சிக்கியுள்ளது. சுற்றுலா போன்ற வருவாய்த் துறைகள் திவாலாகியுள்ளன. அத்தியாவசிய பொருட்கள் தவிர இதர விநியோக சங்கிலிகள் தடைப்பட்டுள்ளன. ஆடைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. ஆனால், உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. நுகர்வோர் மற்றும் முதலீட்டாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். என உலக வங்கி தனது அறிக்கையில் ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.
தெற்காசிய நாடுகளின் வளர்ச்சி விகிதம் 6.3 என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக 1.8-2.8 என்ற விகிதத்தில் வளர்ச்சி இருக்கும். பாதிக்கும் மேற்பட்ட நாடுகள் கடுமையான மந்த நிலையைச் சந்திக்கும் எனக் கருதப்படுகிறது. சுற்றுலாத் துறையின் மூலமாக வருவாயை மையமாகக் கொண்ட மாலத்தீவு உள்ளிட்டவை பெரிய அளவில் பாதிக்கப்படும்.
இந்தியாவின் கடந்த ஆண்டு வளர்ச்சி விகிதமாக 4.8-5.0லிருந்து, தற்போதைய வளர்ச்சி விகிதம் 1.5-2.8 எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கெனவே இருக்கக்கூடிய சமத்துவமின்மையை மேலும் அதிகரிக்கும். ஒரு புறம் பொருளாதார பாதிப்புகள் இருப்பினும், மறுபுறத்தில் விளிம்புநிலை மக்களுக்கான சுகாதாரம் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
முன்னெச்சரிக்கை இல்லாமல் முழு முடக்க நடவடிக்கை அறிவிக்கப்பட்ட பின் ஆயிரக்கணக்கில் புலம் பெயர்ந்த விளிம்பு நிலை தொழிலாளர்கள் கால்நடையாகவே தங்கள் கிராமங்களுக்கு நடந்து சென்றனர்.
இவ்வாறான விளிம்பு நிலை மக்களின் வாழ்வினை பாதுகாக்க அரசு உடனடியாக பொது சுகாதார கட்டமைப்பினை பலப்படுத்த வேண்டும் . அதேபோல விரைவான பொருளாதார மீட்சிக்குக் களம் அமைக்க வேண்டும் என்றும் உலக வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. குறுகிய காலங்களில் சமானிய மக்களுக்கு மருத்துவம் மற்றும் உணவு ஆகியவை கிடைப்பதை அரசு உறுதி செய்திட வேண்டும்.
புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பினை உருவாக்குவது, அவர்களின் வாழ்வாதார தேவைகளைப் பூர்த்தி செய்வது, மற்றும் அத்தியாவசிய பொருட்களின் ஏற்றுமதி இறக்குமதிக்கு மறுக்கப்பட்டுள்ள அனுமதியை நீக்குவது போன்றவற்றினை உலக வங்கி பரிந்துரைத்துள்ளது.
தற்போதைய சுகாதார நெருக்கடி முடிந்ததும், அரசுகள் தங்கள் நாட்டின் பொருளாதாரத்தினை மீட்டெடுப்பதில் அதீத கவனம் செலுத்த வேண்டும். புதிய பொருளாதார கொள்கைகள் பின்பற்றப் பட வேண்டும். "இவ்வாறு செய்யத் தவறினால், நீண்டகால வளர்ச்சி பாதிக்கப்பட்டு இத்தனை ஆண்டுக்காலம் வறுமை ஒழிப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுவிடும்.” என்று உலக வங்கியின் தெற்காசியப் பிராந்தியத்தின் துணைத் தலைவர் ஹார்ட்விக் ஷாஃபர் கூறியுள்ளார்.