கடந்த ஆண்டின் முடிவின் தொடக்க காலகட்டத்தில் சீனாவில் ஒரு புதிய வகை வைரஸ் தீவிரமாகப் பரவி வருவதை அந்நாடு உறுதி செய்திருந்தது. பின்னர் எதிர்பாராத விதமாக சீனாவின் வூகான் மாகானதில் இந்த வைரஸ் தொற்றால் மக்கள் ஆயிரக்கணக்கில் இறக்கத்தொடங்கினர். பின்னர் உலகம் முழுவதும் இந்த வைரஸ் தொற்று பரவ தொடங்கியது.
சீனா தற்போது நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்திருந்தாலும், உலகின் பல நாடுகள் இந்த வைரஸ் தொற்றினை சமாளிக்கத் திணறி வருகின்றது. குறிப்பாக இத்தாலி, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் இறப்பு விகிதம் கட்டுக்கடங்காமல் அதிகரித்துவருகிறது.
இந்த நிலையில் உலக வல்லரசான அமெரிக்காவில் சமீபத்தில் ஒரு வயதிற்கும் குறைவான குழந்தை ஒன்று கொரோனா தொற்றால் மரணமடைந்திருப்பதாக இல்லினாய்ஸ் மாகாண சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.
செய்தியாளர் சந்திப்பின் போது அம்மாகாண ஆளுநர் ஜே.பி. பிரிட்ஸ்கர் இதனை உறுதி செய்திருக்கிறார்.
இதற்கு முன்பு எப்போதும் இது போன்ற இறப்பு ஏற்படவில்லை என்று சுகாதாரத்துறை இயக்குநர் நொகோஸி இஸக் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மிக அரிதான இவ்வகை இறப்பு குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக சுகாராத் துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த துக்க செய்தி குழந்தையின் குடும்பத்தினருக்கு எவ்வளவு வருத்தமாக இருக்கும் என்பதைத் தான் உணர்வதாகவும், நீட்டிக்கப்படாத குழந்தையின் வாழ்விற்குத் தான் மிகவும் வருந்துவதாகவும் ஆளுநர் ஜே.பி. பிரிட்ஸ்கர் தெரிவித்திருக்கிறார். கடந்த வாரம் அமெரிக்க கலிபோர்னியாவில் இளைஞன் ஒருவர் கொரோனா தொற்றுக்குப் பலியாகியுள்ளதாக, லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி பொதுச் சுகாதாரத் துறை, தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல கடந்த வாரம், பிரெஞ்சு சுகாதார அதிகாரி ஜெரோம் சாலமன், பாரிஸின் ஐலே-டி-பிரான்ஸ் பிராந்தியத்தில் 16 வயது சிறுமி இறந்துவிட்டதைக் குறிப்பிட்டிருந்தார். மேலும், இளம் பருவத்தினர் இந்த பாதிப்புக்கு உள்ளாவது மோசமான விடயம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
பல ஆய்வுகளில் கொரோனா தொற்றால் வயது முதிர்ந்தவர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவதாகக் கண்டறியப்பட்ட நிலையில் இந்த இறப்புகள் ஆய்வுக்கு மாறாக உள்ளதாக நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
உலக அளவில் அதிக அளவில் கொரோனா நோயாளிகளைக் கொண்ட நாடாக அமெரிக்கா விளங்குகிறது. அந்நாட்டில் 120000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இறந்திருக்கின்றனர். மற்ற நாடுகளான சீனா, இத்தாலி, பிரிட்டன் போன்றவை அமெரிக்காவைவிடக் குறைந்த எண்ணிக்கையிலான நோயாளிகளையே கொண்டிருக்கின்றன.
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 450 அதிகமானோர் இறந்திருக்கின்றனர். இல்லினாய்ஸ் மாகாணத்தில் புதியதாகப் பதிவு செய்யப்பட்ட 13 இறப்புகளில் மேற்குறிப்பிட்ட ஒரு வயதுக்குட்பட்ட குழந்தையும் உள்ளடங்கும்.