கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் விதிக்கப்பட்ட நாடு தழுவிய 21 நாட்கள் ஊரடங்கு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதியோடு முடிவுக்கு வருகிறது. இந்நிலையில் இந்த ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களிடம் காணொளி மூலம் தெரிவிக்க உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊரடங்கு நீட்டிப்பது குறித்து நாளை மாநில முதல்வர்களுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி.
அரசு தரப்பிலிருந்து நமக்கு வரும் தகவல்கள், ஊரடங்கு நீட்டிக்கப்படவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கின்றன. ஆனால், இந்த முறை கட்டுப்பாடுகளில் பல மாற்றங்கள் செய்யப்படலாம் என்று தெரிகிறது. குறிப்பாக அத்தியாவசிய சேவைகளைத் தவிர்த்து மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்குத் தடை, பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து மூடல், மத சம்பந்தமான கூட்டங்களுக்குத் தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தொடரும் என்று கூறப்படுகிறது.
ஊரடங்கினால் பொருளாதாரத்தில் மிகப் பெரிய தேக்கம் ஏற்பட்டுள்ளதால், சில துறைகளுக்குக் கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வு கொடுக்கப்படலாம்.
இந்திய ரிசர்வ் வங்கி, நாட்டின் பொருளாதார மீட்சி என்பது கொரோனா வைரஸ் பரவலினால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது விமானப் போக்குவரத்துத் துறைதான். சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் விமானப் போக்குவரத்துத் தொடங்கப்படலாம் எனத் தெரிகிறது.
நாட்டில் மொத்தமுள்ள 600 மாவட்டங்களில் 75-ல்தான் கொரோனா பரவல் என்பது மிக அதிகமாக இருப்பதாகவும், இதனால் அரசு இந்த முறை அதற்கு ஏற்றாற்போல் திட்டமிடும் எனவும் தெரிகிறது.
கடந்த வியாழக் கிழமை நாட்டில் உள்ள அனைத்துப் பிரதான கட்சித் தலைவர்களுடனும் பிரதமர் மோடி பேசினார். அப்போது, ஊரடங்கை நீக்குவது அவ்வளவு சுலபமல்ல என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
“அரசின் நோக்கம் என்பது ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றுவதுதான். தற்போது நாட்டில் நிலவும் பிரச்சினை என்பது சமூக அவசரநிலைக்குச் சமமானது. இதனால் சில கறார் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். அது தொடர வேண்டும்,” என்று பிரதமர் கூறியதாக, அவருடன் ஆலோசனையில் ஈடுபட்ட அரசியல் தலைவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
பல மாநிலங்களும், ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஒடிசா மாநில அரசு, மாநிலத்தில் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுதாக நேற்று அறிவித்தது.
இந்தியாவில் இதுவரை 6,412 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 199 பேர் மரணமடைந்துள்ளார்கள். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 33 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.