அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இதன் அடிப்படையில் முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
21 நாட்கள் ஊரடங்கின் 9-வது நாளை இந்தியா இன்று கடைப்பிடித்து வருகிறது. இந்த சூழலில் அனைத்து மாநில முதல்வர்கள், தலைமை செயலர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் முறையில் ஆலோசனை நடத்தியுள்ளார்.
மோடியுடன், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் உள்ளிட்டோர் வீடியோ கானபரன்சிங்கில் இருந்தனர். அவர்கள் சமூக விலகலை கடைப்பிடித்திருந்தனர். கொரோனா பாதிக்கப்பட்டவரின் தும்மலிலிருந்து பரவும் நீர்த்துளிகள் மற்றவர்களுக்கு கொரோனாவை ஏற்படுத்தும் சக்தி கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
வீடியோ கான்பரன்சிங்கில் பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள்.
மாநில முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தின்போது, கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடிக்க எந்த மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது, என்பதுபற்றி முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது.
இந்தியாவில் கொரோனா பரவல் கணிசமாக உயர்ந்து கொண்டிருந்த நிலையில், டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் காணப்பட்டன. அவர்களில் நூற்றுக்கணக்கானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகவும் முதல்வர்களிடம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு மார்ச் 25-ம்தேதி முதற்கொண்டு கடைப்பிடிக்கப்படுகிறது.
ஊரடங்கை 21 நாட்களுக்கு மேல் நீட்டிக்க வாய்ப்பில்லை என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஊரடங்கு முடிவதற்கு இன்னும் 12 நாட்கள் உள்ள நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரித்தால் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, ரயில்கள் மற்றும் தனியார் விமானங்கள் ஏப்ரல் 15-ம்தேதி பயணத்திற்கான டிக்கெட் முன்பதிவுகளை தொடங்கியுள்ளது.