தேசிய அளவில் கொரோனா தொற்று பரவாமல் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் முழு முடக்க கட்டுப்பாட்டை (LOCKDOWN) பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். இதையொட்டி பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்தன. இந்த நிலையில் அத்தியாவசிய பணிகள் இக்காலகட்டங்களில் முற்றிலுமாக முடங்கியுள்ளன. விவசாயம் சார்ந்த பணிகள் பெரிதளவு பாதிக்கப்பட்டிருக்கின்றன.
தற்போது பஞ்சாப் மாநிலத்தில் விவசாய அறுவடை பணிகளை மேற்கொள்வதற்கு, அப்பணிகள் சார்ந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று அம்மாநில முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார். இந்த அறுவடையில் 185 லட்சம் டன் கோதுமை அறுவடையை எதிர்பார்க்கப்படுவதால், மாவட்ட வாரியாக இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், போதுமான அறுவடை ஏற்பாடுகளை உறுதி செய்வது அவசியம் என்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதால் மத்திய அரசு தரப்பிலிருந்து இந்த முழு முடக்க நடவடிக்கை நீட்டிக்கப்படலாம் என செய்திகள் வெளிவந்திருக்கின்றன.
தாங்கள் தற்போது அறுவடை காலத்தினை எதிர்நோக்கியுள்ளதாகவும், இந்த முழு முடக்க நடவடிக்கையானது ஏப்ரல் 14-ம் தேதியுடன் முடிவடையும் என்பதால் ஏப்ரல் 15-ல் அறுவடை தொடங்கும் என்று அமரீந்தர் சிங் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து நான்காவது ஆண்டாக, பெரிய அளவில் அறுவடை நடைபெற இருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விவசாய பணி தவிர்த்து பிற மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து இன்று மாநில அமைச்சரவை முடிவு செய்யும் என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரின் இந்த முழு முடக்க நடவடிக்கைக்கு பின்னர் சுமார் 95,000 பேர் தங்களது சொந்த மாநிலமான பஞ்சாபிற்கு திரும்பியுள்ளனர். இதில் 44,000 பேர் டெல்லி வழியாக வந்து சேர்ந்திருக்கின்றனர். தேசிய அளவில் கொரோனா தொற்றில் டெல்லி மூன்றாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாபிற்கு திரும்பி வந்த பலருக்கும் விமான நிலையங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அதில் சில நேரங்களில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பது சவாலாக இருக்கும். எனவே குறிப்பிட்ட நாட்கள் இடைவெளிக்கு பிறகு முன்னர் விமான நிலையங்களில் சோதனை செய்யப்பட்ட நபர்களை அவர் வீடுகளுக்கே சென்று சோதனை செய்யப்பட்டது. அவர்களில் பெரும்பாலோனோர் தற்போது தனிமைப்படுத்தல் முடிந்து வெளியே உள்ளனர்.
தேசிய அளவில் கேரளாவுக்கு பிறகு, தொற்று பரவாமல் இருக்க முழுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட மற்றொரு மாநிலம் பஞ்சாபாகும். இம்மாநிலத்தில் 132 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 2877 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லி மாநாட்டில் தொடர்புடையவர்களாக 651 பேர் கண்டறியப்பட்டுள்ளனர் என்றும், அதில் 639 பேரை அரசு அடையாளம் கண்டுள்ளதாகவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். அதே போல மாநிலத்தில் சுகாதாரப் பணியாளர்களுக்கான மருத்துவ உபகரணங்கள் மற்றும் பிபிஇ (தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள்) போன்றவற்றில் பற்றாக்குறை நீடிப்பதை குறிப்பிட்டு "நாங்கள் இதை எதிர்பார்க்கவில்லை" என்று கூறியுள்ளார்.
மாநிலத்தில் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான நான்கு கட்டங்களை முதல்வர் குறிப்பிட்டுள்ளார். இதனை அமலாக்குவதற்கு தேவையான நிதி உள்ளிட்ட சிக்கல்களால் மாநிலம் திண்டாடி வருகின்றது. இந்த நிலையில் இந்த பிரச்சினையை தீர்க்க ரூ .15,000 கோடி மதிப்புள்ள முழு நிதியுதவி கொண்ட ஐந்தாண்டு திட்டத்தை அறிவிக்க, இந்த கோரிக்கைகள் மத்திய அரசிக்கு நெருக்கடியளிக்கின்றன.
பஞ்சாப் அரசு தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க 101 புதிய வென்டிலேட்டர்கள் மற்றும் 2.7 லட்சம் என் 95 முகமூடிகளை வாங்க முயல்கின்றது. உள்ளூர் உற்பத்தியாளர்களிடமிருந்து அதிகமான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணம் கருவிகளையும் அரசு ஆர்டர் செய்துள்ளது.
இந்த நிலையில் தேசிய அளவில் 6,000 க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 199 பேர் உயிரிழந்துள்ளனர். சர்வதேச அளவில் 16 லட்சத்திற்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 96,000ஐ நெருங்குகின்றது.
With input from PTI