காங்கிரஸின் மூத்த நிர்வாகியும் எம்பி-யுமான சசி தரூர், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை கடுமையாக கண்டித்துள்ளார். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தை எட்டியுள்ள நிலையில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக செயல்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் (hydroxychloroquine) மருந்தை இந்தியா ஏற்றுமதி செய்யவில்லை என்றால், விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். டிரம்பின் இந்தக் கருத்திற்குத்தான் சீற்றம் கொண்டுள்ளார் தரூர்.
வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் டிரம்ப், “ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை பிரதமர் நரேந்திர மோடியின் அரசு, ஏற்றுமதி செய்யாமல் இருக்குமென்றால் நான் ஆச்சரியப்படுவேன். அவர்தான் அது குறித்து என்னிடம் சொல்ல வேண்டும். நான் பிரதமர் மோடியிடம், ஞாயிற்றுக் கிழமை கூட பேசினேன். அப்போது எங்களின் மருந்துகள் வருவதை அனுமதிப்பதற்கு நன்றி தெரிவித்தேன். அதே நேரத்தில் தற்போது மருந்தை ஏற்றுமதி செய்ய முடியாது என்று அவர் சொன்னால் பரவாயில்லை. அதே நேரத்தில், அதற்கு விளைவுகளை சந்திக்க நேரிடும்,” என்று எச்சரிக்கை விடுக்கும் தொனியில் இவ்விவகாரம் குறித்துப் பேசியுள்ளார்.
உலகளவில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை உற்பத்தி செய்வதில் இந்தியா முன்னணியில் உள்ளது. கடந்த வாரம் இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் ஐ.சி.எம்.ஆர், இந்த மருந்தை கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் சுகாதாரத் துறை ஊழியர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரை செய்தது. மலேரியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படும் இந்த மருந்தினால் கொரோனா தொற்றை எதிர்கொள்ள முடியுமா என்று வல்லுநர்கள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் டிரம்பின் கருத்திற்கு சசி தரூர், “உலக அரசியலில் எனக்கு பல ஆண்டுகள் அனுபவங்கள் உள்ளன. ஆனால், ஒரு அரசோ அல்லது அந்த அரசின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரோ இப்படி இன்னொரு அரசை வெளிப்படையாக மிரட்டி நான் பார்த்தது கிடையாது. இந்தியாவில் உற்பத்தியாகும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் எப்போது உங்களின் மருந்தாக மாறியது அதிபரே? எப்போது இந்தியா, அதை உங்களிடம் விற்கிறதோ அப்போதுதான் அது உங்களின் மருந்தாக மாறும்,” என்று காட்டமாக தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
டிரம்பின் இந்த அச்சுறுத்தல் வந்த சில மணி நேரங்களைத் தொடர்ந்து இந்தியா, “கோவிட்-19 மூலம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்குத் தேவைப்படும் மருந்துகள் அனுப்பப்படும்,” என்று தெரிவித்துள்ளது. மார்ச் 25 ஆம் தேதி, மத்திய அரசு, ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்வதற்குத் தடை விதித்தது.
World
India
State & District Details
State | Cases | Active | Recovered | Deaths |
---|