நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 5.85 லட்சமாக உயர்ந்துள்ள நிலையில், 87 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா நோயாளிகளைக் கொண்ட டெல்லியானது, கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக அறிவித்துள்ளது. ஜூன் மாத இறுதியில் 60 ஆயிரம் தொற்று நோயாளிகளை டெல்லி கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்பட்டதில் தற்போது 26 ஆயிரம் நோயாளிகளையே டெல்லி கொண்டிருக்கின்றது. ஒட்டு மொத்தமாக டெல்லி 87,360 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஒரு வாரத்தில் நாளொன்றுக்கு 4,000பேர் வீதம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை 2,000ஆக குறைந்துள்ளதாக டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லியை பொறுத்த அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,199 பேருக்கு கொரோனா தொற்றால் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒட்டுமொத்த தொற்று பாதிப்பு 87,360 ஆக அதிகரித்துள்ளது. அதே போல 62 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 2,742 ஆக அதிகரித்துள்ளது.
“நாங்கள் தொற்று பரிசோதனையை அதிகரிக்கத் தொடங்கியபோது 100 பேரில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால், இன்று 100 பேரில் 13 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.“ என கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
தற்போது நாடு முழுவதும் குணமடைந்தோரின் விகிதமானது 56 சதவிகிதமாக இருக்கக்கூடிய நிலையில், டெல்யில் குணமடைந்தோரின் விகிதம் 60 லிருந்து 66 ஆக உயர்ந்துள்ளது. அதே போல உயிரிழப்பு எண்ணிக்கையும் 3 சதவிகிதமாக உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் டெல்லி முழுவதும் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 16,000லிருந்து 21,000ஆக உயர்ந்துள்ளது.
முன்னதாக, ஜூன் மாத இறுதியில் டெல்லி ஒரு லட்சம் கொரோனா நோயாளிகளை கொண்டிருக்கும் என்றும், ஜூலை மாத இறுதியில் இந்த எண்ணிக்கையானது 5.5 லட்சமாக உயர்ந்திருக்கும் என்றும் டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.