தமிழகத்தில் புதிதாக இன்று 33 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் சிகிச்சை குணம் அடைந்து 27 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவலை சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது-
தமிழகத்தில் தற்போது வரை 1,09,972 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 87,159 பேர் 28 நாட்கள் வீட்டு கண்காணிப்பை முடித்துள்ளார்கள்.
அரசால் 155 தனிமைப்படுத்தும் மையங்கள் அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 23 அரசு ஆய்வகங்கள் உள்பட மொத்தம் 33 ஆய்வகங்கள் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றன.
இன்றளவில் 53,072 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்றுமட்டும் 33 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,629 ஆக உயர்ந்துள்ளது. இன்று 27 பேருடன் மொத்தம் 662 பேர் இதுவரையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் 946 கொரோனா பாதிப்புடன் (Active Cases) சிகிச்சை எடுத்து வருகின்றனர்.
மொத்தம் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. 3 ஆயிரத்து 371 வென்ட்டிலேட்டர்களும், 29,074 படுக்கைகளும் தயார் நிலையில் இருக்கின்றன.
இன்று பாதிப்பு ஏற்பட்ட 33 பேரில் 15 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். 5 பேர் தஞ்சையையும், 4 பேர் மதுரையையும் சேர்ந்தவர்கள். சென்னையில் மட்டும் 373 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.