தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை இன்று 75 அதிகரித்து மொத்த எண்ணிக்கை 309- ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரே நாளில் 75 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 74 பேர் டெல்லி மாநாட்டிலிருந்து தமிழகம் திரும்பியவர்கள் என்று சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது-
தமிழகத்தில் இன்று 75 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 74 பேர் டெல்லி மாநாட்டுக்கு சென்றவர்கள். இன்னொருவர் சென்னையை சேர்ந்தவர். ஆக மொத்தம் 309 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.
டெல்லி மாநாட்டில் தமிழகத்தில் இருந்து 1,103 பேர் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. முடிவுகள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்படுகின்றன.
டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் 264 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மற்றபடி, பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு மாவட்டத்தில் கொரோனா கண்காணிப்பு மற்றும் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 17 இடங்களில் ஆய்வகங்கள் உள்ளன. இந்த வாரத்திற்குள் கூடுதலாக 6 ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படும். நம்மிடம் 12 ஆயிரம் சோதனை கருவிகள் இருக்கின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.