எலக்ட்ரானிக் நுண்ணோக்கியால் எடுக்கப்பட்ட கொரோனா வைரஸின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதனை புனேவில் இந்திய மருத்து ஆய்வு கழகத்தின் (ஐ.சி.எம்.ஆர்.) விஞ்ஞானிகள் படம் எடுத்துள்ளனர்.
கண்ணுக்கே தெரியாத இந்த கோவிட் 19 வைரஸ் மனிதனின் தொண்டை பகுதியிலிருந்து படம் பிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஜனவரி 30-ம்தேதி முதல் கொரோனா நோயாளி உறுதி செய்யப்பட்டார். அவர் சீனாவின் வுஹான் மாகாணத்திலிருந்து இந்தியாவுக்கு வந்த ஒரு பெண். அவரிடம்தான் இந்த கொரோனா வைரஸ் படம் எடுக்கப்பட்டுள்ளது.
புனேவில் உள்ள அறிவியலாளர்கள் இந்திய பெண்ணின் தொண்டையில் எடுக்கப்பட்ட வைரசும், வுஹானில் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் வைரசும் 99.98 சதவீதம் ஒத்திருப்பதாகக் கூறியுள்ளனர்.
டிவி, இன்டர்நெட்டுகளில் கொரோனா வைரஸ் உருண்டையாகவும், அதைச் சுற்றிலும் முள் கிரீடம் வைத்தது போலவும் சித்தரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஐ.சி.எம்.ஆர் வெளியிட்டுள்ள படம் சற்று வித்தியாசமாகக் காணப்படுகிறது.
இந்த வைரஸை TEM (Transmission electron microscopy) தொழில்நுட்ப முறையில் மருத்துவ துறை வல்லுநர்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்ட பெண்ணின் தொண்டையிலிருந்து படம் பிடித்துள்ளனர்.
அறிவியலாளர்கள் இதனை முதலில் வுஹான் கொரோனா வைரஸ் (CoV)என்று அழைத்துள்ளனர். ஆனால், தற்போது இது ஏற்படுத்தி வரும் தாக்கங்களின் அடிப்படையில், இந்த வைரஸ் மிகக்கடுமையான மூச்சுத் திணறலை ஏற்படுத்தும் சார்ஸ் (SARS)-CoV-2 வகையை சார்ந்தது என்று அறிவியலாளர்கள் கூறியுள்ளனர்.