ஐரோப்பியாவில் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதால், ஐரோப்பியாவில் இருந்து அமெரிக்கா வர, 30 நாட்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். மேலும், இந்தத் தடையில் வர்த்தக நிறுத்தமும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் 460 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த கடும் காட்டுப்பாடுகள் அங்குப் பொருந்தாது என்றும் அவர் கூறியுள்ளார். கொரோனா தொற்று நோயின் தொடக்கமாக இருக்கும் சீனாவிலிருந்து அனைத்து பயணத்தையும் அந்த அரசு நிறுத்த தவறியதால், ஐரோப்பாவில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று டிரம்ப் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பைத் தொற்றுநோயாக உலக சுகாதார அமைப்பு (wHO) அறிவித்துள்ளது. மேலும், அதன் உலகளாவிய பரவல் மற்றும் அதன் தீவிரத்தன்மை காரணமாக கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதைத் தொடர்ந்து, அமெரிக்க இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு அதிகளவு எண்ணிக்கையிலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு முதல் இறப்புகளை எதிர்கொள்ளும் புதிய நாடுகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால், கொரோனா வைரஸின் விரைவான பரவலைக் குறைக்க பல்வேறு நாடுகளின் அரசுகளும், கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் துவங்கியுள்ளன.
அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அமெரிக்காவில் இதுவரை 38 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். மேலும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் விதமாக ஐரோப்பிய நாடுகளிலிருந்து அமெரிக்கா வருவதற்கு 30 நாட்கள் தடை விதிப்பதாக அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அதிபர் டிரம்ப் தனது அடுத்தடுத்த ட்வீட்டர் பதிவுகளில் கூறியதாவது, கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து அமெரிக்காவையும், உலகளவில் உயிர்களைக் காப்பாற்றவும், தடுக்கவும், கண்டறியவும், அதற்குத் தடுப்பு மருந்துகள் கண்டறிந்து, சிகிச்சை அளிக்கவும் ஒரு கொள்கையை அமெரிக்கா உருவாக்கி வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், உலகின் மிகப் பெரிய நாடாக அமெரிக்கா விளங்குகிறது. எங்களிடம் சிறந்த விஞ்ஞானிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு வல்லுநர்கள் உள்ளனர். அவர்கள் ஒவ்வொரு நாளும் தனித்துவமான காரியங்களைச் செய்யும் அற்புதமான மனிதர்கள்...., "என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
(With Inputs from AFP)