டெல்லியில் கடந்த மாதம் மதக் கூட்டம் நடந்த பகுதியே தற்போது, கொரோனா வைரஸ் தொற்றுநோயின் ஹாட்ஸ்பாட்டாக உருவெடுத்துள்ள நிலையில், இந்த கூட்டத்தில் மேற்குவங்க மாநிலத்தில் இருந்து கலந்துகொண்டவர்கள் குறித்து எந்த தகவலையும் வழங்க முதல்வர் மம்தா பானர்ஜி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், தப்லீக் ஜமாத் தலைமையில் நடந்த கூட்டத்தில் எத்தனை பேர் கலந்துகொண்டனர் என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு கடும் கோபத்துடன் பதிலளித்த மம்தா பானர்ஜி, இதுபோன்ற வகுப்புவாத கேள்விகளைக் கேட்காதீர்கள் என்று ஆவேசமாக தெரிவித்தார்.
மேற்குவங்க தலைமை செயலகத்தில் நடந்த இந்த செய்தியாளர்கள் சந்திப்பு குறித்த வீடியோ மம்தாவின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. ஆனால், டெல்லி மதக் கூட்டம் குறித்த கேள்வியும், பதிலும் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த வாரம் டெல்லி மதக் கூட்டம் தொடர்பாக மம்தா சில தகவல்களை பகிர்ந்திருந்தார். அதில், மேற்கு வங்கத்தில் இருந்து டெல்லி நிஜாமுதீனுக்கு 71 பேர் சென்றதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. அதில், 54 பேரை மாநில அரசு அடையாளம் கண்டுள்ளது.
அதில், 40 பேர் மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் மியான்மர் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த வெளிநாட்டவர்கள் ஆவார்கள். தற்போது அவர்கள் அனைவரும் கொல்கத்தாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று கூறிய அவர், மிதமுள்ள நபர்களும் விரைவில் தாங்களாகவே முன்வந்து, அதிகாரிகளை தொடர்பு கொள்வார்கள் என்று நம்புவதாக தெரிவித்திருந்தார்.
எனினும், இதனையடுத்து, தப்லீக் ஜமாத் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குறித்து எந்த தகவலும் தற்போது வரை வெளிவரவில்லை. மற்ற மாநிலங்களில் டெல்லி மதக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் அதிகளவிலானோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், இது எதிர்க்கட்சியினர் மத்தியில் முக்கிய கவனம் பெற்றது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தப்லீக் ஜமாத் கூட்டத்துடன் தொடர்புடையவர்கள் ஆவார்கள். மேற்குவங்கத்தில் இதுவரை 19 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 3 பேர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, டெல்லி மதக் கூட்டத்தில் மேற்குவங்கத்தை சேர்ந்த 300 பேர் கலந்துகொண்டதாகவும், அவர்கள் அனைவரும் கண்டறியப்பட்டு, கொல்கத்தாவின் நியூடவுன் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில், 109 பேர் வெளிநாட்டவர்கள் என்றும், 195 பேர் மேற்குவங்கத்தை சேர்ந்தவர்கள் என்றும் தெரிகிறது. எனினும், அதிகாரப்பூர்வமாக இந்த தகவல்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.