This Article is From Apr 02, 2020

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ. 1,125 கோடியை வழங்கிய விப்ரோ!!

மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், கொரோனா நிவாரண நிதிகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். அவ்வாறு வழங்கப்படும் நிதி கார்ப்பரேட் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நடவடிக்கைகளுக்கான நிதியுடன் சேர்க்கப்படும் என்று கூறியிருந்தார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ. 1,125 கோடியை வழங்கிய விப்ரோ!!

டாடா அறக்கட்டளை ரூ. 1,500 கோடியை கொரோனா நிவாரண நிதியாக ஒதுக்கியுள்ளது.

ஹைலைட்ஸ்

  • கொரோனா நிவாரண நிதி வழங்குமாறு பிரதமர் மோடி கோரிக்கை வைத்தார்
  • கார்ப்பரேட் நிறுவனங்கள் கொரோனா நிவாரண நிதி அளித்து வருகின்றனர்
  • விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜியின் அறக்கட்டளை ரூ. 1,125 கோடி ஒதுக்கியது
Bengaluru:

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அஸிம் பிரேம்ஜியின் விப்ரோ நிறுவனம் ரூ. 1,125 கோடியை வழங்கியுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘விப்ரோ குழுமத்தால் வழங்கப்படும் தொகை மருத்துவப் பணிகளுக்கும், கொரோனா தடுப்பில் முன்னணியில் நிற்கும் பணியாளர்களின் நலனுக்கும், சமூகத்தில் உள்ள ஏழை எளிய மக்களின் நலனுக்காகவும் பயன்படுத்தப்படும்'  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரூ. 1,125 கோடியில், விப்ரோ லிமிட்டெட் சார்பாக ரூ. 100 கோடியும், விப்ரோ என்டர்பிரைசஸ் லிமிட்டெட் தரப்பில் ரூ. 25 கோடியும், விப்ரோ நிறுவனர் அஸிம் பிரேம்ஜியின் அறக்கட்டளையிலிருந்து ரூ. 1,000 கோடியும் ஒதுக்கியுள்ளது.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான சமூகப் பொறுப்பு நடவடிக்கைகளுக்கான நிதியுடன் இந்த ரூ. 1,125 கோடி இணைக்கப்படும் என்று விப்ரோ தெரிவித்துள்ளது. மேலும் விப்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மனித சமுதாயத்திற்கான உடனடி தேவைகள், சுகாதார அவசரநிலை, கொரோனா பாதிப்பு, கொரோனா பாதிக்கப்பட்டவர்களைக் கையாளுதல் உள்ளிட்டவற்றை நாம் ஒருங்கிணைந்து அணுக வேண்டும்.

கொரோனா நிவாரண நடவடிக்கைகளை அஸிம் பிரேம்ஜியின் அறக்கட்டளையில் உள்ள 1,600 பணியாளர்கள், அரசுத் துறைகளுடன் இணைந்து செயல்படுத்துவார்கள். இந்த அறக்கட்டளையின் கீழ் 350 சமூக நிறுவனங்கள் நாடு முழுவதும் செயல்படுகின்றன' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், கொரோனா நிவாரண நிதிகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். அவ்வாறு வழங்கப்படும் நிதி கார்ப்பரேட் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நடவடிக்கைகளுக்கான நிதியுடன் சேர்க்கப்படும் என்று கூறியிருந்தார்.

இதன் அடிப்படையில் டாடா அறக்கட்டளை ரூ. 1,500 கோடியை கொரோனா நிவாரண நிதியாக ஒதுக்கியுள்ளது.

.