ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு முதன்முறையாக நேற்று விரிவான பேட்டியளித்திருந்தார் பிரதமர் நரேந்திர மோடி. நேர்காணலின்போது பிரதமர் மோடி, பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.
அப்போது பேட்டி எடுத்தவர், ‘4 ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்துள்ளீர்கள். இந்தக் காலக்கட்டத்தில் உங்களால் எதாவது சாதிக்க முடியவில்லை என்ற வருத்தம் இருக்கிறதா..?' என்று கேட்டார்.
அதற்கு ஆழ்ந்து யோசித்துப் பின்னர் பேசிய பிரதமர், ‘இருக்கிறது… ஒரு விஷயம் இருக்கிறது. மேல்தட்டு மக்களின் வாழ்க்கையோடு என்னால் ஒன்றிப் போக முடியவில்லை. அதன் ஒரு பகுதியாகவும் என்னால் ஆக முடியவில்லை. இந்த விஷயம் எனக்கு எந்தவித ஆச்சரியத்தையும் தரவில்லை.
மேல்தட்டு மக்கள் என் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருக்க வேண்டுமென்று நான் என்றும் நினைத்ததில்லை. காரணம், எனது பின்புலம் சாதரணமானது. நான் எளிய மக்களின் பிரதிநிதி' என்று பதிலளித்தார்.
தொடர்ந்து நெறியாளர், ‘பிரதமராக இருந்ததில் உங்களுக்கு மிகவும் பிடித்த விஷயம் எதுவாக இருந்தது' என்றார். அதற்கு, ‘நான் பிரதமராக இருந்த ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்தேன். எனது வேலையில் ஒரு நேர்மை இருக்கும். எனவே, நான் பணி செய்யும் ஒவ்வொரு நிமிடமும் விருப்பத்துடனேயே செய்தேன். மக்கள்தான் எனது பதவிக் காலம் குறித்து முடிவெடுக்க வேண்டும்' என்று கூறினார்.