கொரோனா தொற்று தேசிய அளவில் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் முழு முடக்க நடைமுறை உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. பல்வேறு மாநிலங்களில் மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்துள்ளன. இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக அதிகரித்து வரக்கூடிய சூழ்நிலையில் தற்போது ஒடிசா மாநில அரசானது, புவனேஸ்வர் மற்றும் பத்ராக் நகரங்களை 48 மணி நேரம் மொத்தமாக முடக்குவதாக அறிவித்துள்ளது.
இன்று இரவு (வெள்ளிக்கிழமை) 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி வரை இந்த 48 மணி நேர அனைத்து முடக்க நடைமுறை அமலில் இருக்கும் என்று மாநில உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
ஒடிசாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக ஐந்து பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் நான்கு பேர் புவனேஸ்வரை சேர்ந்தவர்களாகவும், ஒருவர் பத்ராக் நகரினை சேர்ந்தவராவார்.
இந்த 48 மணி நேர அனைத்து முடக்க நடவடிக்கையானது மேற்குறிப்பிட்ட இரு நகரங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், மாநிலத்தின் மற்ற பகுதிகளில் மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள முழு முடக்கம்(Lockdown) அமலில் இருக்கும் எனவும், அப்பகுதிகளில் வழக்கம் போல அத்தியாவசிய பொருட்களுக்கான பரிவர்த்தனைகள் நடைபெறும் என்றும் அம்மாநில தலைமைச் செயலாளர் ஏ.கே. திரிபாதி தெரிவித்துள்ளார். மேற்குறிப்பிட்ட இரு நகரங்களில் அத்தியாவசிய சேவைக்கான எவ்வித பரிவர்த்தனையும் நடைபெறாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.
48 மணிநேர அனைத்து முடக்க நடவடிக்கை அமலில் இருக்கும் புவனேஸ்வர் மற்றும் பத்ராக் நகரில் தேர்ந்தெடுக்கப்பட்ட மருந்துக் கடைகள் மட்டுமே திறந்திருக்கும் என்றும், எந்த மருந்தகங்கள் தொடர்ந்து செயல்படும் என்பதை உள்ளூர் நிர்வாகங்கள் தீர்மானிக்கும். மேலும், இந்த நடவடிக்கை மூலமாக சமூக தொற்று பரவலை தடுக்க முடியும் என்றும் திரிபாதி குறிப்பிட்டுள்ளார்.
அரசு அறிவித்துள்ள இந்த அறிவிப்பானது கிட்டதட்ட ஊரடங்கு போல இருக்கும் எனவும், இது தொற்று பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் எனவே, இதன் காரணமாக மக்கள் பீதியடைய வேண்டியதில்லை என்றும் அம்மாநில காவல்துறை டைரக்டர் ஜெனரல் பி அபய் குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கையை மீறுபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.