இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா பாதிப்பு இல்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ஹர்ஷ்வர்தன், “மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் மூலமான இறப்பு விகிதம் குறைவாகவே உள்ளது. கொரோனா பாதித்தவர்களில் 3.3 சதவீதம் பேர் மட்டுமே இந்தியாவில் உயிரிழந்துள்ளார்கள். 28.83 சதவீதம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.
தற்போது 35,902 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் 4.8 சதவீதம் பேருக்கு ஐசியூவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 1.1 சதவீகதம் பேருக்கு வென்டிலேட்டர் உதவி தேவைப்படுகிறது. 3.3 சதவீதம் பேருக்கு பிராண வாயுவின் உதவி தேவைப்படுகிறது.
கடந்த 7 நாட்களில் நாட்டில் உள்ள 180 மாவட்டங்களில் சுவாசத் தொற்று தொடர்பாக ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. அதேபோல 180 மாவட்டங்களில் கடந்த 13 நாட்களாக எவ்வித கொரோனா பாதிப்பும் இல்லை. மேலும், 164 மாவட்டங்களில் 14-20 நாட்களாக புதிதாக கொரோனா பாதிப்பு பதிவு செய்யப்படவில்லை. கூடுதலாக, 136 மாவட்டங்களில் கடந்த 21 முதல் 28 நாட்களாக ஒரு கொரோனா பாதிப்பும் ஏற்படவில்லை.
சத்தீஸ்கர், ஜார்கண்ட், இமாச்சல பிரதேசம், ஜம்மூ காஷ்மீர், கேரளா, மிசோரம், மணிப்பூர், கோவா, மேகாலயா, லடாக், அருணாச்சல பிரதேசம், ஒடிசா, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.
இதுவரை டாமன் மற்றும் டியூ, சிக்கிம், நாகாலாந்து, இலட்சத்தீவுகளில் ஒரு கொரோனா பாதிப்புக் கூட பதிவாகவில்லை.
இந்தியாவில் கொரோனா தொற்று இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள செய்யப்படும் சோதனை அளவும் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது 327 அரசு மருத்துவமனைகள் மற்றும் 118 தனியார் பரிசோதனைக் கூடங்களில் தினமும் 95,000 பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. நாட்டில் இதுவரை மொத்தமாக 13,57,442 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன,” என்று கூறினார்.
நாட்டில் கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஹர்ஷ்வர்தன், “தற்போது தேசிய அளவில் 821 கொரோனா சிகிச்சைக்கான மருத்துவமனைகள் உள்ளன. அவற்றில் 1,50,059 படுக்கைகள் உள்ளன. 1,898 மருத்துவ மையங்களில் 1,19,109 படுக்கைகள் உள்ளன. 7,569 தனிமைப்படுத்தும் மையங்கள் உள்ளன.
29.06 லட்சம் பாதுகாப்பு உபகரணமான பிபிஇ கிட்டுகள் உள்ளன. 62.77 லட்சம் என்-95 முக உரைகள் உள்ளன. அவை பல்வேறு மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன,” என்றார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையானது 56,300ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 3,390 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 103 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பால் 1,275 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொடர்ந்து, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,273 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை, மொத்தமாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 16,540 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்றைய தினம் டெல்லியில் அதிகபட்சமாக 448 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து, டெல்லியில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது, 5,980 ஆக உயர்ந்துள்ளது. மேலும், உயிரிழப்பு எண்ணிக்கையும் 66 ஆக உயர்ந்துள்ளது.