இந்தியாவில் கொரோனா வைரஸ் பரிசோதனை எண்ணிக்கை 2 கோடியை கடந்ததாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது.
ஆக.2ம் தேதி வரை மொத்தமாக 2,02,02,858 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. நேற்று ஒரு நாளில் மட்டும், 3,81,027 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கொரோனாவை கண்டறிவதற்கான மொத்த சோதனைகளின் எண்ணிக்கை ஜூலை 6ம் தேதி ஒரு கோடியை கடந்திருந்தது.
தற்போது நாட்டில் 1,348 சோதனை ஆய்வகங்கள் உள்ளன. இதில், பொதுத்துறையில் 914 மற்றும் 434 தனியார் ஆய்வகங்கள் உள்ளன.
புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்தில் ஒரே ஒரு ஆய்வகத்துடன் இருந்த நிலையில், ஊரடங்கு தொடங்கிய போது, 100 ஆய்வகங்கள் வரை விரிவுப்படுத்தப்பட்டது. அதன்பின்னர் கடந்த ஜூன் 23ம் தேதியன்று, ஆயிரமாவது சோதனை ஆய்வகத்தை ஐசிஎம்ஆர் உறுதிப்படுத்தியது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 18 லட்சத்தை கடந்துள்ளது. ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை 52,972 ஆக பதிவானதை தொடர்ந்து, 17 லட்சத்தில் இருந்து, பாதிப்பு எண்ணிக்கை 18 லட்சமாக உயர்ந்துள்ளது. எனினும், குணமடைபவர்களின் எண்ணிக்கையானது 11 லட்சத்தை தாண்டியுள்ளது என சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 18,03,695 ஆக உள்ளது. உலகளவில் பாதிப்பு எண்ணிக்கையானது 1.75 கோடியாக உயர்ந்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கர்நாடகா முதல்வர் எடியூரப்பா, உள்ளிட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதித்த நாடுகளின் வரிசையில் அமெரிக்கா, பிரேசிலை தொடர்ந்து, 3வது நாடாக இந்தியா உள்ளது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)