கடலூரில் இயங்கி வரும் பட்டாசு ஆலை ஒன்றில் வெடிவிபத்து ஏற்பட்டதில், ஆலை உரிமையாளர் உட்பட 7 பேர் பலியாகினர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே பட்டாசு உற்பத்தி ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இன்று அதிகாலை பலத்த சத்தத்துடன் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு மீட்பு படையினர், துரித நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்த வெடிவிபத்தில் ஆலை உரிமையாளர் உட்பட 7 பேர் பலியாயினர். மேலும், படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. போலீசார் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெடிவிபத்தால் ஏற்பட்ட அதிர்வுகளும், சத்தமும் பல கிலோமீட்டருக்கு உணரப்பட்டது.
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 7 பேர் உடல்கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.