வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆம்பன் புயல் அதிதீவிரப்புயலாக உருவெடுத்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளதால், மேற்குவங்கம் மற்றும் ஒடிசாவுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்த புயல் மேற்குவங்க கடற்கரை பகுதியில் புதன்கிழமையன்று கரையைக் கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தீவிர புயலான ஆம்பன், கடந்த 6 மணிநேரத்தில் வங்கக்கடலின் தென்கிழக்குப் பகுதியிலிருந்து, வடக்கு - வடகிழக்கு நோக்கி நகர்ந்து 13 கி.மீ வேகத்தில் சென்று வருகிறது. இது மேலும் தீவிரமடைந்து, அதி தீவிரப்புயலாக உருவெடுத்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 6 மணிநேரத்தில் அதி தீவிரப்புயலாக மாறும் ஆம்பன் புயல், வடக்கு - வடகிழக்கு நோக்கி நகர்ந்து, வடமேற்கு வங்கக்கடல் வழியாக வேகமாக நகர்ந்து மேற்குவங்கம் - வங்கதேசம் கடற்கரைகளில் மே.20ம் தேதி பிற்பகல் அல்லது மாலை நேரங்களில் அதி தீவிரப்புயலாகவே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கைகள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில், கடலோரப் பகுதிகளில் பாதகமான வானிலை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுதவற்கு குறைந்தபட்சம் 48 மணி நேரத்திற்கு முன்னதாகவே மஞ்சள் அலர்ட் அல்லது புயல் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
அதேபோல், கடலோரப் பகுதிகளில் பாதகமான வானிலை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதற்கு குறைந்தபட்சம் 24 மணி நேரத்திற்கு முன்னதாக "ஆரஞ்சு அலர்ட்" அல்லது "புயல் எச்சரிக்கை" விடுக்கப்படுகிறது.
புயல் கரையை கடக்கும் நேரத்தில் உள்பகுதியில் ஏற்படும் பாதகமான வானிலை மற்றும் அதன் இயக்க திசையை பொருத்து 'ரெட் அலர்ட்' விடுக்கப்படுகிறது.
தற்போது, ஒடிசா மற்றும் வங்கதேசத்தை வானிலை மையம் "மஞ்சள்" எச்சரிக்கைக்கு உட்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக சிறப்பு நிவாரண ஆணையர் (SRC) பி.கே.ஜெனா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, ஒடிசாவில், தேசிய பேரிடர் மீட்புப் படையே சேர்ந்த (NDRF) 17 குழுவினர் பணியில் உள்ளனர். கடந்த ஆண்டு அந்த மாநிலத்தில் ஃபானி புயல் பாதிப்பு ஏற்பட்ட போது, 11 லட்சம் பேரை பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் இருந்து மீட்பதற்கான ஏற்பாடுகளை அவர்கள் செய்துள்ளதாக கூறினார்.
தொடர்ந்து, கஞ்சம், கஜப்தி, பூரி, ஜகத்சிங்க்பூர், கேந்திரபாரா, பத்ரக், பாலசோர், மயூர்பஞ்ச், ஜஜ்பூர், கட்டாக், குர்தா மற்றும் நாயகர் உள்ளிட்ட 12 கடலோர மாவட்டங்களில் நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது.
மேற்கு வங்கம் - ஒடிசா கடற்கரைகளிலும், வடக்கு வங்கக்கடல் பகுதிகளிலும் புதன்கிழமை வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
(With inputs from PTI)