1999 ஆம் ஆண்டுக்குப் பிறகு நாட்டில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போகும் புயலாக உருவெடுத்துள்ளது ஃபனி(Cyclone Fani). அதன் தாக்கத்தையும் பலத்தையும் பறைசாற்றும் விதத்தில் இந்திய கடற்படை சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
ஒடிசாவில் இன்று ஃபனி(Fani) புயல் கரையை கடக்க உள்ளதால், அம்மாநிலத்தில் கடற்படை, விமானப்படை, கடலோர காவல் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை உள்ளிட்டவை உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்திய கடற்படை, வங்கக் கடலில் தனது கப்பல் ஒன்றில் இருந்து எடுத்த புகைப்படங்களை ட்விட்டர் மூலம் பகிர்ந்துள்ளது. அப்படி வெளியிட்ட புகைப்படங்களில் இந்திய கடற்படையின் அந்த கப்பல், 45 டிகிரி வரை திரும்புவது தெரிகிறது. அதேபோல கப்பலின் ஒரு பகுதியில் தண்ணீர் உட்புகுந்துள்ளதையும் அந்தப் படத்தில் காண முடிகிறது. ஃபனி புயல் எந்த மாதிரி தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்பதற்கான சிறிய உதாரணமாக இந்தப் படங்கள் அமைந்துள்ளன.
ஃபனி புயலை சமாளிக்க இந்திய கடற்படை 7 போர் கபல்களையும், 6 விமானங்களையும், 7 ஹெலிகாப்ட்டர்களையும் விசாகப்பட்டினத்தில் உள்ள ஐஎன்எஸ் தேகாவில் நிறுத்தி வைத்துள்ளது.
ஃபனி புயல் இன்று ஒடிசாவை புரட்டிப் போட உள்ளதால், 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ‘மிகத் தீவிர புயலான' ஃபனியை சமாளிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து நேற்று உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவை சந்தித்து, பிரதமர் நரேந்திர மோடி விவரங்களை கேட்டறிந்தார். ஃபனி புயலையொட்டி இந்திய வானிலை ஆய்வு மையம், ‘மிகத் தீவிர மழையும், அதிக கடல் கொந்தளிப்பையும் ஃபனி புயல் ஏற்படுத்தும். புரியின் தெற்கில் இன்று ஃபனி கரையை கடக்கும் போது 175 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசும்' என்று தகவல் தெரிவித்துள்ளது.