This Article is From Jun 11, 2019

அரபிக் கடலில் ‘வாயு’ புயல்- தெரிந்துகொள்ள வேண்டியவை!

அரபிக் கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது

அரபிக் கடலில் ‘வாயு’ புயல்- தெரிந்துகொள்ள வேண்டியவை!

அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் அரபிக் கடலில் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது வானிலை ஆய்வு மையம்

தென்மேற்குப் பருவ மழை வலுப்பெற்று வரும் நிலையில், அரபிக் கடலில், வாயு புயல் உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நேற்று இந்தப் புயல் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த புயல், நிலப் பகுதியைவிட கடல் பகுதிக்கே அதிக மழை தரும் என்று கூறப்படுகிறது.

இம்மாதம் 9 ஆம் தேதி, கேரளாவில் பருவமழை தொடங்கியது. இதைத் தொடர்ந்து, அரபிக் கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுகிறது. அந்தப் புயலுக்கு ‘வாயு' என்று பெயரிடப்பட்டுள்ளது. 

இந்தப் புயலால் அடுத்த மூன்று நாட்களுக்கு அரபிக் கடலை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ள வானிலை மையம், அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் அரபிக் கடலில் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது. 

இந்தப் புயல் குறித்து பிரபல வானிலை கணிப்பாளர் ‘தமிழ்நாடு வெதர்மேன்' பிரதீப் ஜான், “அரபிக் கடலில் புயல் உருவானால், அது கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களுக்கு மழையைக் கொடுக்கும். அதேபோல மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்திலும் இந்தப் புயலினால் மழை பெய்யக்கூடும்.

காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளான குடகுப் பகுதியில் இதனால் நல்ல மழை வரும். வயநாட்டிலும் மழை அதிகமாக இருக்கலாம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை கன்னியாகுமரியைச் சேர்ந்த கோடையார், கோவையின் வால்பாறைப் பகுதி, நீலகிரி பகுதிகளில் இந்த புயல் மழையைக் கொண்டு வரும். பொள்ளாச்சி மற்றும் திருப்பூரில் கூட மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

திருப்பூர், நாமக்கல், கரூர், ஈரோடு, சேலம், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் இந்தப் புயலினால் பலத்த காற்று வீசக்கூடும்.

சென்னைக்குப் பெரிதாக இதனால் மழை இருக்காது.” என்று விளக்கமாக கூறியுள்ளார். 

.