This Article is From Jun 02, 2018

நிபா வைரஸால் அதிகரிக்கும் உயிர் பலி… அலெர்ட்டில் கேரளா!

நிபா வைரஸ் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் முடுக்கி விடப் பட்டுள்ளதாகவும், மக்கள் தேவையில்லாமல் பீதியடைய வேண்டாம் என்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது

நிபா வைரஸால் அதிகரிக்கும் உயிர் பலி… அலெர்ட்டில் கேரளா!

கோழிக்கோடு மாவட்டத்தில் இருக்கும் பள்ளிகள் வரும் 5-ம் தேதி திறக்கின்றன

ஹைலைட்ஸ்

  • யாரும் பிதியடைய வேண்டாம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
  • கடைசி இரண்டு நாளில் மட்டும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்
  • கோழிக்கோட்டில் இருக்கும் பள்ளிகள் 5-ம் தேதி திறக்கின்றன
Kozhikode:

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் பரவி வரும் நிபா வைரஸ் காரணமாக இதுவரை 16 பேர் இறந்துள்ளனர். கடைசி இரண்டு நாட்களில் மட்டும் இருவர் இறந்துள்ளது நிபா வைரஸ் குறித்த அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.

இது குறித்து கேரள சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா, `நிபா வைரஸ் மீண்டும் பரவ வாய்ப்புள்ளது. இதுவரை நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்களுக்குத் தான் இந்த வைரஸ் தொற்று இருக்கும். எனவே, அப்படிப்பட்டவர்களை இனம் கண்டு, தீவிரமாக கவனித்து வருகிறோம். நிபா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் என்று சந்தேகப்படுபவர்களை சோதனை செய்துள்ளோம். முறையான முடிவு வரும் வரை காத்திருக்கிறோம். யாராக்காவது நிபா வைரஸ் அறிகுறி இருந்தால், அவர்கள் உடனடியாக கோழிக்கோட்டில் இருக்கும் கட்டுபாட்டு அறைக்கு வந்து சோதனை எடுத்துக் கொள்ள வேண்டும்' என்று தெரிவித்துள்ளார். 

கடைசி இரண்டு நாளில் இரண்டு பேர் நிபா வைரஸ் மூலம் இறந்துள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளித்த நான்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை விடுப்பு எடுத்துக் கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தி உள்ளது. 

கோழிக்கோட்டில் இருக்கும் நீதிமன்றத்தின் கண்காணிப்பாளர் சில நாட்களுக்கு முன்னர் நிபா வைரஸ் பாதித்து இறந்தார். இதையடுத்து, நீதிமன்றத்தை சில நாட்களுக்கு முடி வைக்கலாம் என்று சிலரால் கருத்து கூறப்பட்டது. ஆனால், அதற்கு அவசியமில்லை என்று அரசு தரப்பு தெரிவித்துவிட்டது. கண்காணிப்பாளருடன் நெருக்கமாக இருந்த நபர்களை உற்று கவனித்து வருகிறது அரசு. 

வெயில் காலம் முடிந்த இன்று முதல் கேரளாவில் பள்ளிகள் திறக்கின்றன. ஆனால், கோழிக்கோடு மாவட்டத்தில் வரும் 5 ஆம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. 

இதுவரை நிபா வைரஸ் இருக்கலாம் என்று சந்தேகப்பட்டு 196 பேர்களை சோதனை செய்துள்ளனர். அதில் 18 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. 11 பேருக்கு வைரஸ் பாதிப்பு அறிகுறி தென்படுகிறது. 1,500 பேருக்கு இந்த வைரஸ் தாக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. 

நிபா வைரஸ் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் முடுக்கி விடப் பட்டுள்ளதாகவும், மக்கள் தேவையில்லாமல் பீதியடைய வேண்டாம் என்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. 

.