இத்தாலியில் நேற்று காலை பாலிவுட் ஸ்டார் ஜோடிகளான தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.
இத்தாலியில் உள்ள கோமோ ஏரி என்ற தீவுப் பகுதியில் நெருங்கிய குடும்ப உறவுகள் மட்டுமே பங்குபெற தென்னிந்திய முறைப்படி ‘தீப்வீர்' திருமணம் நடைபெற்றுள்ளது. இரு குடும்பத்தார் மட்டுமே சூழ மணமக்கள் தங்கள் திருமண நிகழ்வைக் கொண்டாடி உள்ளனர். திருமணத்தில் பங்குபெற்ற அனைவரும் வெள்ளை மற்றும் தங்க நிற உடைகள் அணிந்து காணப்பட்டுள்ளனர்.
திருமண மாப்பிள்ளை வெள்ளை நிற உடையிலும் மணமகள் ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறங்களிலான உடையிலும் வலம் வந்த புகைப்படக் காட்சிகள் வெளியாகி உள்ளன.
மணமக்கள் இருவரும் தாங்களே விரும்பும் நேரத்தில் தங்களது புகைப்படங்களை வெளியிட வேண்டும் என்பதால் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரும் மொபைல் போனுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் திருமண நிகழ்வில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் மணமக்களுக்கு முன்பாக யாரும் சமூக வலைதளங்களில் வெளியிடக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இத்தாலியில் திருமணம் முடித்த பின்னர் இந்தியா திரும்பும் மணமக்கள் வருகிற நவம்பர் 21-ம் தேதி பெங்களூருவில் நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். மேலும் பாலிவுட் திருவிழா ஒன்றும் மணமக்களை வாழ்த்துவதற்காக நவம்பர் 28-ம் தேதி மும்பையில் நடைபெற இருக்கிறது.