Delhi Clashes: டெல்லியின் வடகிழக்குப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வன்முறைச் சம்பவத்திற்கு இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த வன்முறைச் சம்பவங்களுக்கு 3 கட்சிகள்தான் காரணம் என்று பாஜகவின் தேசியச் செயலாளர் எச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
சிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் நடந்த இந்த வன்முறையில் பல்வேறு கட்டடங்களுக்கும், வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டன. இந்த வன்முறைச் சம்பவம் காரணமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் நடைபெற இருந்த பொதுத் தேர்வுகளை சிபிஎஸ்இ வாரியம் தள்ளிவைத்துள்ளது. மேலும் டெல்லி அரசு, மாநிலத்தில் உள்ள தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.
தலைநகரில் அசாதாரண சூழல் நிலவுவதனால், டெல்லி முதல்வர் அவரிந்த் கெஜ்ரிவால்“பலதரப்பட்ட மக்களுடன் இரவு முழுவதும் நான் தொடர்பிலிருந்தேன். நிலைமை மிக மோசமாக உள்ளது. போலீஸ் எவ்வளவு முயன்றபோதும், அமைதியான சூழல் திரும்பவில்லை. எனவே, ராணுவம் உடனடியாக அழைக்கப்பட வேண்டும். பதற்றமான இடங்களில் ஊரடங்கு உத்தரவு போடப்பட வேண்டும். இது குறித்து மத்திய உள்துறை அமைச்சருக்கு நான் கடிதம் எழுத உள்ளேன்,” என்று ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவங்கள் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், “டெல்லியில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் மற்றும் உயிரிழப்பு அதிர்ச்சியளிக்கின்றன. இதை வன்மையாகக் கண்டிக்கின்றேன்,” என்று ட்விட்டர் மூலம் தெரிவித்தார்.
அதை ரீ-ட்வீட் செய்த எச்.ராஜா, “காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் திமுக ஆகிய கட்சிகள்தான் இந்த வன்முறைக்குக் காரணம். நீங்கள்தான், நாட்டில் ஊடுருவிய முஸ்லிம்களை இந்தியாவுக்கு எதிராகத் தூண்டிவிட்டீர்கள்,” என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.