டெல்லியில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு மண்டலத்தில் உள்ள குடியிருப்பு வாசிகள் தங்களது பகுதிகளில் உள்ள தடுப்புகளை அகற்ற வலியுறுத்தி நடத்திய பேச்சுவார்த்தை கைகலப்பாக மாறியதை தொடர்ந்து, போலீசார், தன்னார்வலர்கள் மீது அப்பகுதியை சேர்ந்த சிலர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தகவலில், தலைநகரில் கட்டுப்பாட்டு மண்டலமாக உள்ள நாரைனா பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாகவும், இதில் சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரிகிறது.
அந்த கட்டுப்பாட்டு மண்டல பகுதிக்கு, உணவுகளை விநியோகிக்க போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் சென்றுள்ளனர். அப்போது, சில குடியிருப்பு வாசிகள் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்க அதிகாரிகள் வைத்துள்ள தடுப்புகளை அகற்றுமாறு வலியுறுத்தியுள்ளனர்.
இதில் இருதரப்புக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக வெடித்தது. அந்த பகுதியில் உள்ள wz பிளாக்கில் மட்டும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து, அது கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டது.
முன்னதாக, மத்திய அரசு இந்த மாதம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி அறிவித்தது. அதில், மால்கள், உணவகங்கள், வழிபாட்டு தலங்கள் போன்றவற்றை தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் மீண்டும் திறக்கலாம் என்று தெரிவித்தது.
எனினும், இந்த தளர்வுகள் கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு பொருந்ததாது என்று தெரிவித்தது. இந்த பகுதியில் இருக்கும் மக்கள் அத்தியாவசிய, அவசர தேவைகளை தவிர்த்து வீட்டை விட்டு வெளியே வருவதற்கு அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டது.
தொற்றுநோய்களுக்கு மத்தியில் அத்தியாவசிய சேவை ஊழியர்கள் தாங்கள் பணியாற்றி வரும் மக்களிடமிருந்து விரோதத்தை எதிர்கொள்வது இது முதல் முறை அல்ல. கொரோனா வைரஸ் சந்தேக நபர்களை பரிசோதிக்க அல்லது வைரஸ் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியபோது மருத்துவர்கள், போலீசார் மற்றும் சுகாதார ஊழியர்கள் மீது தாக்குதல்கள் நடந்ததாக செய்திகள் வந்துள்ளன.
கடந்த மார்ச் மாதம், பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தின் முன்னணியில் உள்ள மருத்துவர்கள் மற்றும் பிற சுகாதார ஊழியர்களை "கடவுளின் அவதாரங்கள்" என்று குறிப்பிட்டதோடு, அவர்களைத் துன்புறுத்துபவர்கள் போலீஸ் நடவடிக்கையை எதிர்கொள்வார்கள் என்றும் கூறினார்.
டெல்லி, நாட்டின் மிக மோசமான பாதிப்புக்குள்ளான பகுதிகளில் ஒன்றாகும். இதுவரை அங்கு, 59,746 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,175 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.