நெருக்கடி என்பது ஒரு சமூகத்தின் சிறந்த மற்றும் மோசமான குணங்களை வெளிக் கொண்டு வரும் என்று சொல்லப்படுவது உண்டு. இந்த கொரோனா கால நெருக்கடியில், இந்தியத் தலைநகர் டெல்லியின் மிக மோசமான பண்பு வெளிப்பட்டுள்ளது. டெல்லியில் சாலையோரம் மாம்பழக் கடை போட்டிருந்த ஒருவரிடமிருந்து மக்கள் திருட்டில் ஈடுபட்டிருப்பது பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
வடக்கு டெல்லியின் ஜகத்பூரி பகுதியைச் சேர்ந்த பழ வியாபாரி சோத். அவர், ‘நான் கடை போட்டிருந்த இடத்திற்குப் பகத்திலிருந்த ஒரு பள்ளிக்கு அருகில் கைகலப்பு சம்பவம் ஏற்பட்டது. அப்போது ஒரு கும்பல் வந்து, என் கடையை நகர்த்தச் சொல்லிக் கேட்டனர்.
அருகிலிருந்தவர்கள் எனது மாங்கனிங்கள் பாதுகாக்கப்படாமல் சாலையோரம் இருப்பதைப் பார்த்துள்ளனர்.
15 பெட்டிகளில் 30,000 ரூபாய் மதிப்புடைய மாம்பழங்களை வைத்திருந்தேன். அவர்கள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டனர்' என்கிறார் வேதனையுடன்.
2, 4, 6 என தங்களால் இயன்ற வகையில் மாம்பழங்களை எடுத்துச் சென்றுள்ளனர் மக்கள். இது குறித்தான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
இரு சக்கர வாகனத்தில் வந்த சிலர், மாம்பழங்களை தங்கள் ஹெல்மட்டுக்குள் வைத்து திருடிச் செல்வது தெரிகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் டிராஃபிக் ஜாம் ஏற்பட்டது.
தன் மாம்பழங்களை இழந்த வியாபாரி சோத், “கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதிலிருந்தே வியாபாரம் மந்தமாகத்தான் இருந்து வருகிறது. இந்த சம்பவம் என் முதுகெலும்பையே உடைத்துவிட்டது. இது குறித்து காவல் துறையிடம் புகார் அளித்துள்ளேன். இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,” என்று வருத்தப்படுகிறார்.
சில நாட்களுக்கு முன்னர் நாடு முழுவதும் அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அப்போதிலிருந்து பல்வேறு இடங்களில் சமூக விலகல் விதிமுறைகள் மீறப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில்தான், டெல்லி திருட்டு சம்பவமும் அரங்கேறியுள்ளது.